பக்கம் எண் :

174தமிழியற் கட்டுரைகள்

     எ-கா :
  "நத்தம்போற் கேடு முளதாகும் சாக்காடுஞ்
வித்தகர்க் கல்லா லரிது."

(குறள். 235)

இதனைக் கபிலர் பெயரிலுள்ள

  "தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்-மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி."
 
என்னும் வள்ளுவமாலைப் பாவுந் தெரிவிக்கும்.
8. தமிழ்நாட்டுத் திருப்புரவலர் (Patron Saint).
     ஒவ்வொரு நாட்டிற்கும் திருப்புரவலர் அல்லது காவல் தூயர் ஒருவர் உளர். தமிழ்நாட்டுத் திருப்புரவலர் திருவள்ளுவரே. அவர் முக்கால அரசியல் அறிஞராதலால், இக்காலத்திற்கும் ஏற்றவாறு அரசியலமைப்பைத் தம் நூலிற் கூறியேயுள்ளார்.
     முதல் மாந்தன் குடும்பம் தோன்றியதிலிருந்து, அரசும் தோன்றி, குடும்பத் தலைவன், ஊரன் (கிழவன்), நாடன், வேள், மன்னன், கோ(கோன்), வேந்தன் எனப் படிப்படியாக வளர்ந்து, செங்கோலன், கொடுங்கோலன், முற்றதிகாரி, மட்டதிகாரி என இடையிடையே மாறி, இன்று பெரும்பாலும் பாராளுமன்றக் கோவரசு, பாராளுமன்றக் குடியரசு, மக்களாட்சிக் குடியரசு, கூட்டுடைமைக் குடியரசு என நால்வகைப் பொறுப்பாட்சிப் பொது மக்களரசாகத் திருந்தியுள்ளது.
     மக்கள் தொகை மிக்க இக்காலத்திற்குப் பொதுவாக ஏற்றது கூட்டுடைமை யாட்சியே.
     கார்ல்மார்க்கசும் இலெனினும் போன்றவர் இந் நூற்றாண்டில் வகுத்த கூட்டுடைமை சிறப்பாக ஆலைத் தொழிலாளர் நிலைமை நோக்கியதே; திருவள்ளுவர் இருபது நூற்றாண்டுகட்கு முன்னரே வகுத்த கூட்டுடைமையோ, எல்லாத் தொழிலாளர்க்கும் அலுவலர்க்கும் பொதுவானதாகும்.
  "பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்."

(குறள். 44)

  "பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது."....

(குறள். 227)

  "பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை"

(குறள். 322)

  "தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா
லம்மா வரிவை முயக்கு."

(குறள். 1107)