வானுயர் தோற்றம் எவன் செய்யும் (272) - வான் போலப் பெரிய தபசு பண்ணி ஆவது என்ன? மாடல்ல மற்றையவை (400) - அழுஞ்சு போகிற செல்வம் செல்வமல்ல. மண் மாண் புனைபாவை (407) - மண்ணினால் பண்ணின பொம்மை. இடிக்குந்துணையார் (447) - சிரிக்கச் சொல்லிக் கெடுக்காமல், அடிச்சுப் புத்தி சொல்லுகின்ற பேர். காட்சிக் கெளியன் - குடியான பேர் வந்தால் எளிதாகக் காண. கதை சொல்லும் கலைஞர் பொதுமக்கள் குழுமியுள்ள இடத்தில் நின்று, அவர்கள் கேட்டு மனம் மகிழும்வகையில் இனிக்க இனிக்கக் கதைகளையும் கருத்துக்களையும் கூறும் கலைஞர்களைப்போல் (உபந்நியாசம், கதாகாலட்சேபம் செய்வோர்) பரிதியார் பல குறட்பாக்களுக்கு விளக்கம் தருகின்றார். கருத்தைச் சொல்லும்முறை, எளிய பேச்சு மொழியை ஆளல், இலக்கணத்தை நினையாமல் மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கூறுதல் போன்ற இயல்புகளை இவரிடம் காணலாம். நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். (320) என்ற குறளுக்குப் பரிதியார், “ஒருவர்க்குத் தான் செய்த விதனம், பின்பு தனக்கு வருகிறபடியி னாலேயே, ஒருவர்க்கும் தாங்கள் விதனம் செய்யார்” என்று பொருள் எழுதியபின், பின்வரும் கதையைக் கூறுகின்றார்: “அஃது எப்படி என்றால், பிரம்ம ராட்சதன் ஓர் இராசாவின் மகளைப்பற்றி நின்று, சந்தியாவந்தனை செய ஆற்றங்கரையிலே வந்து நின்றளவில், பிராமணப் பிள்ளையின் பிள்ளை வாசிக்கின்றவனுக்கு அன்றையிற் பாடம் இந்தக் குறள் ஆகையால் அவன் முகசுத்தி பண்ண வந்தவன், இந்தக் குறளைப் பாடமாகச் சொல்லிக்கொண்டு வந்தான். இத்தை பிரம்ம ராட்சதன் கேட்டுத் தானொரு பிராமண வடிவாய், இந்தப் பிள்ளை வாய்ப்பாடத்தை இரண்டு பிரகாரங் கேட்டு, ‘நாம் இராசாவின் மகளை நோய் செய்தோமே! நமக்கு அந்த விதனம் வரும்’ என்று பயப்பட்டு, இந்தப் பிள்ளை முன்னிலையாக இராச குமாரத்தியை விட்டுப் போச்சு என்றவாறு” |