மன்னர்கள் சகாப்தம் பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராக நடைபெற்ற இந்திய விடுதலைப் போர் வரலாறு பல்வேறு கட்டங்களாக அமைந்ததாகும் .அவற்றுள் முதல் கட்டம் தெற்கே நடந்த பாளையக்காரர் போராகும் . இந்தியாவின் தென்கோடியில் திருநெல்வேலிச் சீமையிலே பாளையக்காரர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தினர். அவர்களிலே முதல்வனாக - முன்னோடிப் பாளையக்காரனாக விளங்கினான் பாஞ்சாலக்குறிச்சி வீரபாண்டியக் கட்டபொம்மன் . அவனுக்குப் பின், அவனுடைய தம்பி ஊமைத்துரை , சிவகங்கை மருது சகோதரர் ஆகியோர் வீரபாண்டியன் துவக்கி வைத்த போரைத் தொடர்ந்து நடத்தினர் . இந்தப் போர் நடந்த காலக்கட்டம் 1792க்கும் 1801க்கும் இடைப்பட்டதாகும் . இதே காலத்தில், மைசூரிலே ஆட்சிபுரிந்த வீரன் திப்பு சுல்தான் கிழக்கிந்தியக் கம்பெனி வெள்ளையரை எதிர்த்துப் போர்புரிந்து வீர மரணமடைந்தான். இந்திய விடுதலைப்போரின் இரண்டாவது கட்டம் வடக்கே நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியாகும் . வீரபாண்டியக் கட்டபொம்மன் துவக்கி வைத்த விடுதலைப்போரின் முதல்கட்டத்திலே வடபாரதம் கலக்கவில்லை;அமைதியாக இருந்தது. ஆம் ; ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து வடக்கிலே எதுவுமே நிகழவில்லை. அதுபோல, வடக்கே சிப்பாய்ப் புரட்சி நடைபெற்ற 1857 ஆம் ஆண்டிலே, தென் பாரதத்திலே - குறிப்பாக, தமிழ் வழங்கும் மாநிலத்திலே அமைதி நிலவியது. இப்படி, இரண்டு கட்டங்களில் விடுதலைப் புரட்சி நடந்த காலத்தை "மன்னர்கள் சகாப்தம்" என்று அழைக்கலாம். விடுதலைப்போரின் மூன்றாவது கட்டம்போலத் தோன்றுவது 1885ஆம் ஆண்டு முதல் 1905 ஆம் ஆண்டுவரை-அதாவது, சுமார் இருபதாண்டுக் காலம் காங்கிரஸ் மகாசபை தலைமையின் கீழ் நடைபெற்ற உயர்தரக் கல்வி கற்றவர்களின் உத்தியோகக் கிளர்ச்சியாகும் . இதனை, "அரச விசுவாசிகள் சகாப்தம்" என்று அழைக்கலாம். இந்திய விடுதலைப்போரின் நான்காவது கட்டம் தேசிய காங்கிரசின் - அதன் ஒப்பற்ற தளபதியாகத் திகழ்ந்த லோகமான்ய திலகரின் தலைமையின் கீழ் நடைபெற்ற அப்பட்டமான அரசியல் விடுதலைக் கிளர்ச்சியாகும் .இந்தக் காலத்தைத் "திலகர் சகாப்தம்" என்று அழைக்கலாம். |