பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 127

     இந்த  நிலையில், வழக்கம்போல் ஒரு  நாள் பாபநாசம் அருவியில் தன்
மகள்  சுபத்திரையுடன் குளிக்கப்போன   ஐயர், அங்கே  அவள் அருவியின்
சுழலிலே   அகப்பட்டுக்கொள்ள,  அவளை   மீட்க  அவர்   முயன்றபோது,
மகளோடு தாமும் அருவிக்குப் பலியானார்.

      ஐயர், 44  வயதளவே  வாழ்ந்தார். அந்தக்  குறை  ஆயுளிலே, தமிழ்
மொழி  வளர, தமிழினம்  வாழ,  தமிழ்நாடு  உள்ளிட்ட பாரதப்  பெருநிலம்
முழுவதும் பரங்கியர் பிடியிலிருந்து விடுதலை பெற அவர் அரும்பாடுபட்டார்.

     வ.வே.சு.ஐயர் குறை ஆயுளில் மாளாமல் நிறை ஆயுள் வாழ்ந்திருந்தால்,
தமிழ் மொழிக்கு இன்னும்  எவ்வளவோ பெருமைகளைத் தேடிவைத்திருப்பார்.
அவரது அகால மரணம் தமிழின் துரதிர்ஷ்டம் எனலாம்.

பரலி சு.நெல்லையப்பர்

      திரு.பரலி சு.நெல்லையப்பர், நெல்லை மாவட்டம் விடுதலை வீரர்களின்
பிரதான பாசறையாக  விளங்கிய காலத்தில்,  அம்மாவட்டத்தினரால் " வந்தே
மாதரம்   பிள்ளை " என்று   அழைக்கப்பெற்ற   பரலி.  சு. சண்முகசுந்தரம்
பிள்ளையவர்களின் அருமைத் தம்பியாவார்.

      இவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரால் " தம்பி " என்று அன்புடன்
அழைக்கப்பெறும்   பேற்றினைப்    பெற்றார்.   பரலி.சு. நெல்லையப்பருக்கு
உரைநடைத்  தமிழில்  பாரதியார்   எழுதிய   ஒரு  கடிதம்  மிகச்   சிறந்த
இலக்கியமாகக் கருதப்படுகிறது.  அந்தக் கடிதத்தின் சில பகுதிகள் வருமாறு:

      "எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ. நெல்லையப்ப பிள்ளையைப் பராசக்தி
நன்கு காத்திடுக.

      "தம்பி-மாதத்துக்கு  மாதம்,  நாளுக்கு நாள், நினதறிவு மலர்ச்சி பெற்று
வருவதைக்  காண்கிறேன்.  நினது  உள்ளக் கமலத்திலே பேரறிவாகிய உள்-
ஞாயிற்றின்  கதிர்கள்  விரைவிலே  தாக்கி  நினக்கு  நல்லின்பம்  உண்டாகு
மென்றே கருதுகின்றேன்.

     "தம்பி, - நான்  ஏது செய்வேனடா!  தமிழை விட  மற்றொரு பாஷை
சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்த