திலகருடைய மாசுமருவற்ற தேசபக்தியையும் அச்சமற்ற ஆண்மைத்
தனத்தையும் மெச்சிப் போற்றினார் அடிகள். ஆயினும், பலாத்காரத்தை
ஊக்குவிக்கும் அவரது போக்கை அடிகள் விரும்பவில்லை. முற்றிலும் சாத்வீக
நெறியில் நாட்டை நடத்திச் செல்லத் திட்டமிட்டார். 1919ஆம் ஆண்டில்
அமிர்தசரசில் நடந்த காங்கிரசின் முன்பு தம்முடைய ஒத்துழையாமைத்
திட்டத்தை வைத்தார். திலகருக்கு அது முழு அளவில் திருப்தி அளிக்க
வில்லை. ஆயினும், நாட்டில் உருவாகியிருந்த குழப்ப நிலைக்கு அடிகளாரின்
ஒத்துழையாமைத் திட்டம் ஒரு பரிகாரமாக அமையக்கூடுமென்று அவர்
கருதினார். அதனால் பரீட்சார்த்தமாகக் காந்தியடிகளின் திட்டத்தை ஏற்றார்.
1920ல் சேலம் சி.விஜயராகவாச்சாரியார் தலைமையில் அப்போதைய
மத்திய மாகாணத்தின் தலையிடமாகத் திகழ்ந்த நாகபுரி நகரில் கூடிய
காங்கிரஸ் மகாசபையிலே அடிகளாரின் ஒத்துழையாமைத் திட்டம்
அங்கீகரிக்கப்பட்டது. அதனால் காங்கிரசை வழிகாட்டி நடத்திச் செல்லும்
பொறுப்பைக் காந்தியடிகள் ஏற்றார். அந்த மகாசபையில் தான் 'காந்தி
சகாப்தம்' தோன்றியது. அத்துடன் 'திலகர் சகாப்தம்' முடிந்தது. லோகமான்ய
திலகர் 1885ல் காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்தாலும் அந்த மகாசபைக்கு
வழிகாட்டி நடத்திச் செல்லும் தலைமையை 1908ல் தான் அவர் பெற்றார்-
அதாவது சூரத் காங்கிரசுக்குப் பின்புதான் திலகர் சகாப்தம் பிறந்தது.
பதின்மூன்று ஆண்டுகள் பெரும் புயலுக்கு நிகராக திலகர் சகாப்தம்
நடைமுறையிலிருந்தது. " புயலுக்குப்பின் அமைதி " என்பது போல, 1920ஆம்
ஆண்டில், காந்தி சகாப்தம் தோன்றியது.
காந்தி சகாப்தம் தோன்றிய நேரத்திலே பிரதேச மொழிகளை
வளர்ப்பது காங்கிரஸ் மகாசபையின் கொள்கையாக அமைந்தது.
திலகர் சகாப்தத்திலிருந்து காந்தி சகாப்தத்திற்கு நாட்டைக் கொண்டு
வந்த நாகபுரி காங்கிரஸ் மகாசபையிலே காங்கிரஸ் மாநிலங்களை
மொழிவாரி திருத்தி அமைக்கத் தீர்மானித்ததோடு, சுதந்திர இந்தியா
விலே ராஜ்யங்கள் மொழிவாரி திருத்தி அமைக்கப்படும் என்று ஒரு
தீர்மானத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு உறுதி அளித்தது. நாகபுரி
காங்கிரஸ் மகாசபையில் பிரதேச மொழி வளர்ச்சிக்குப் பாடுபடுவது
ஒரு அம்சமாக அமைந்தது. காங்கிரஸ் மாநிலங்களை மொழிவாரி திருத்தி