மாநிலந்தோறும் உள்ள நீதிமன்றங்களும் மாநில மொழியிலேயே நடைபெற வேண்டும். இந்தியா முழுவதற்குமான சுப்ரீம் உயர்நீதி மன்றம் இந்துஸ்தானியில் நடைபெறவேண்டும். சர்வதேச நடவடிக்கைகளுக்காக மட்டும் ஆங்கிலத்தை உபயோகித்துக் கொள்ளலாம். காந்தியடிகள் தெரிவித்த இந்தக் கோரிக்கைகள் பெல்காம் காங்கிரசில் தீர்மானங்களாகவும் நிறைவேற்றப்பட்டு, பிரிட்டிஷ் அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டன. முன் நடைபெற்ற எந்தக் காங்கிரஸ் மகாசபையிலும் மொழிவழித் தேசிய இனங்களின் சுயாட்சி பற்றி இவ்வளவு தெளிவாக எவரும் வலியுறுத்தியதில்லை. காந்தியடிகள், இந்திய சமுதாயத்தினரைப் பலகோடி மனிதர்கள் கொண்ட சந்தைக் கூட்டமாகக் கருதவில்லை. இந்து-முஸ்லீம்- சீக்கிய - கிறித்துவ சமயங்கள் கொண்ட சமஷ்டியாகவும் எண்ணவில்லை. பல்வேறு மொழிகள் பேசும் வெவ்வேறு தேசிய இனங்களின் கூட்டுக் குடும்பமாகவே கண்டார். இயற்கையோடியைந்த இந்த மாதிரியிலேயே சுதந்திர இந்தியாவும் அமையவேண்டுமென்று தமது தலைமை உரையில் கூறினார். காங்கிரஸ் மகாசபையின் வரலாற்றில் மட்டுமல்லாமல், இந்தியாவின் அரசியல் வரலாற்றிலேயும் இது ஒரு மகத்தான திருப்பம் என்று கூறலாம். பிற்காலத்தில் இந்து - முஸ்லிம் மதங்களிடையே ஒற்றுமையை வளர்க்க காந்தியடிகள் அரும்பாடுபட்டார் எனினும், மொழி வழிப்பட்ட தேசிய இனங்களின் உருவகத்தை அழிக்காத முறையிலேயே அதனைச் சாதிக்க முயன்றார். அன்றும் இப்படித்தான்! பிரதேச மொழிகளை வளர்க்கும் பணியிலே வடபுலத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகள் மிகவும் தீவிரம் காட்டி வந்தன. தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி மட்டும் அப்பணியிலே வேகங்காட்டவில்லை ஆம் ; ஆங்கில மோகத்திலிருந்து விடுதலை பெறவில்லை. இந்நிலைகண்டு,அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கிய தமிழ்ப் பெரியார் திரு.வி. கலியாணசுந்தனார் மனம் வருந்தினார். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழிக்கெனத் தனித்தனியே வித்யாபீடங்கள் தோன்றிவரும் நிலையிலே, அப்படி ஓர் அமைப்பு தமிழகத்தில் ஏற்படாதது கண்டு |