"அவரவர், அவரவர்க்குரிய தாய்மொழியிலேயே கல்வி பெறல் வேண்டும்."1 அடிகள், வடக்கிலுள்ளவர்களும் தமிழ் மொழியைப் பயின்றால் மட்டுமே தேசிய ஒருமைப்பாட்டினை உருவாக்க முடியும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்ததோடு அமையாமல் தாமும் தமிழ் பயில முயற்சி எடுத்துக் கொண்டார். அந்த முயற்சியைத் தென்னாப்பிரிக்காவிலிருந்த போதே தொடங்கினர். "இந்தப் போராட்டத்தில் தமிழர்கள் செய்திருப்பதைப்போல வேறு எந்த இந்திய சமூகத்தினரும் அவ்வளவு செய்திருக்கவில்லை. ஆகையால் வேறு காரணங்களுக்காக அல்லவென்றாலும் தமிழர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதை முன்னிட்டாவது தமிழ்ப் புத்தகங்களை நான் சரியாகப் படித்தாக வேண்டுமென்று நினைத்தேன். எனவே, சிறைவாசத்தின் கடைசி மாதத்தை அவர்களுடைய மொழியைக் கவனமாகக் கற்பதில் கழித்தேன். "மேலும், இந்தியா ஒரே தேசிய இனமாக இருக்கவேண்டுமானால், சென்னை மாகாணத்திற்கு வெளியிலிருப்போர் தமிழைக் கற்றுத் தெரிந்திருக்க வேண்டும்."2 காந்தியடிகள், பொது வாழ்க்கையில் புகுந்த ஆரம்ப நாட்களிலிருந்தே, பொதுமக்களடங்கிய கூட்டத்திலே ஆங்கிலத்தில் பேசுவதைத் தவிர்த்து வந்தார். பின்னர் தனி நபர்களோடு உரையாடும் போதும் முடிந்தவரை ஆங்கிலத்தில் பேசுவதைக் குறைத்துக் கொள்ளவே முயன்று வந்தார். தேவைப்படும் போது மொழி பெயர்ப்பாளர்களைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியிலேயே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தவிர்க்கமுடியாத தீமையாகக் கருதி ஆங்கிலத்தில் பேச நேர்ந்தபோதும், ஆங்கிலம் தெரியாத மக்களுக்காகத் தமது பேச்சை அவர்களுக்குப் புரியும் மொழியிலே மொழி பெயர்க்கச் செய்தார். 1906 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ல் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டிரான்ஸ்வாலில் நடந்த ஒரு கூட்டத்தைப்பற்றி அடிகள் தரும் குறிப்பு வருமாறு: "கூட்டத்தின் நடவடிக்கை இந்தியிலோ, குஜராத்திலோ நடந்தது. ஆதலால், கூட்டத்தில் இருக்கும் எவருக்கும் அது
1. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பக்.144 2. காந்தி நூல்கள் தொகுப்பு-1; பக்.135. |