தேசபக்திப் பாடல்கள் இந்தியாவில் ஆதிக்கம் பெற்றிருந்த பிரிட்டிஷ் பேரரசு ஆங்கிலத்தின் வாயிலாக உயர்தரக் கல்வி கற்றுப் பட்டம் பெற்றவர்களுக்கு உரிமைக்குப் போராடும் உணர்ச்சி அதிகம் இருக்காதென்று எண்ணியது. அந்நிய ஆட்சியை, அது இழைக்கும் அநீதிகளை எதிர்க்கும் உணர்ச்சி ஆங்கில மறியாத மக்களுக்கே அதிகமுண்டு என்று நம்பியது. இதில் ஓரளவேனும் உண்மை இருக்கிறது என்பதனை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். காந்தியடிகள், லோகமான்ய திலகர் போன்ற பெருந்தலைவர்கள் ்ஆங்கிலத்தின் வாயிலாகக் கல்வி கற்றுப் பட்டம் பெற்றவர்களாக இருந்தும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிடும் வீரர்களாக விளங்கினரென்றால், அதற்குக் காரணம், அப்பெரியார்கள் ஆங்கில மொழியிடம் மோகம் கொள்ளாமல், தத்தம் தாய்மொழியிடத்துப் பற்று கொண்டிருந்ததுதான். இதனால், பிரதேச மொழிகளின் துணைகொண்டு சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள சாதாரணப் பொதுமக்களுக்கு அரசியல் விழிப்பூட்டும் ஒவ்வொரு முயற்சியையும் எதிர்த்து முறியடிக்க முயன்றது ஆட்சி. காங்கிரஸ் மகாசபையின் நடவடிக்கைகளும் காங்கிரஸ் பெருந்தலைவர்களின் பேச்சும் எழுத்தும் ஆங்கிலத்தில் இருந்தபோது அரசு அஞ்சவில்லை. மாறாக, ஆங்கிலத்திலிருந்து பிரதேச மொழிகளுக்கு மாறத் தொடங்கியபோது தான் அரசு அஞ்சியது. பிரதேச மொழிகளில் வெளிவரும் அரசியல் பத்திரிகைகள், நூற்கள், பிரசுரங்கள் ஆகியவற்றை ஒடுக்கவும் பறிமுதல் செய்யவும் முயன்றது. ஆங்கிலம் கற்றவர்களுக்குச் சிறையிலே 'ஏ' வகுப்பும் 'பி' வகுப்பும் தரப்பட்டன. ஆங்கிலம் பயிலாதவர்கள் - அவர்கள் தம் தாய்மொழியிலே எவ்வளவுதான் புலமை பெற்றிருப்பினும் - 'சி' வகுப்பிலே வைக்கப்பட்டனர். சிறைச்சாலைகளில் அடைபட்ட அரசியல் கைதிகளுக்குப் பத்திரிகைகள், புத்தகங்கள் வழங்குவதிலேயும் இந்த வேற்றுமையைக் கடைப்பிடித்தது பிரிட்டிஷ் அரசு. ஆம்; ஆங்கில செய்தித் தாள்களை, அவற்றிலுள்ள எந்தச் செய்தியையும் மை பூசி மறைக்காமல் |