பண்டைப் புலவர்களைப் புகழ்ந்துரைக்குங்கால், "கம்பனைப் போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை. உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை" என்று கூறினார். அவர் கவிதை "திறமான புலமையெனில் பிற நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்" என்று, உலகெலாம் தமிழ் செழிக்கப் பாடுபடுமாறு தமிழ் மக்களைக் கேட்டுக்கொண்டார். "தமிழ்ச்சாதி" என்றொரு தனிப்பாடல் பாடினார். ஆம்; தமிழ் பேசும் மக்களை நம் தேசியக்கவி பாரதியார் தனியொரு சாதியாக- அதாவது, தனித தேசிய இனமாகக் கருதினார். பாரதியாரின் வாரிசாக விளங்குகின்ற காந்தியக் கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, "தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்று உறுதி தோய்ந்த குரலில், இதயத்தில் இனவுணர்ச்சி பொங்கக் கூறினார். சுதந்திரம் உதிக்கும் நேரத்தில் தமிழன் தூங்கினால்,பிற நிறத்தார். பிறநாட்டார் ஆதிக்கம் அகன்றாலும், பிற மொழியார் ஆதிக்கத்திற்குத் தமிழன் அடிமையாக நேரும் என்பதனைத் தீர்க்க தரிசனத்துடன் எதிர்பார்த்தவர் போல, “தூங்காதே தமிழா!" என்று தமிழனைத் தட்டியெழுப்பி, தான் எழுப்புவதன் காரணத்தைக் கூறுபவர் போல, "சுதந்திர சூரியன் உதிக்கின்ற நேரம் துங்காதே, தமிழா!" என்று பாடினார். "பண்டாரப் பாட்டு" பாரதியார் பாடல்கள் பலவகையானவை. அவற்றிலே, அரசியற் பாடல்களுமுண்டு; ஆன்மீகப் பாடல்களுமுண்டு. விடுதலைப் போர்க்களத்திலே நம் அமரகவி பாடிய ஆன்மீகப்பாடலும் அரசியல் பாட்டாகி விட்டது. ஆம்; "அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே" என்ற ஆன்மீகப் பாடலுக்கு, "பண்டாரப் பாட்டு" என்று தலைப்புத் தந்துள்ளார் பாரதியார். வியப்பென்னவென்றால், அந்தப் பண்டாரப் பாட்டும் ஏகாதிபத்திய எதிரிகளை எதிர்த்துப்பாடும்பாசறைப் பாடலாக ஆக்கப்பட்டதாகும். போராட்டக் காலத்திலே, சட்டத்தை மீறி ஊர்வலம் சென்ற விடுதலைவீரர்கள், "அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே" என்ற பாடலைப் பாடி, ராணுவ வீரர்களைப் போன்று நடைபோட்ட |