மணங்கமழும் நூல்களாகும். மற்றவை சமய-சமூக நூல்களாகும். அவர் இயற்றிய கவிதை நூல்கள் பத்துக்கு மேற்பட்டவை. இவையன்றி, காந்தியடிகளின் பிரார்த்தனைப் பாடலாக விளங்கிய "வைஷ்ணவ ஜனதோ" என்ற குஜராத்திப் பாடலைத் தமிழிலே கவிதை நடையில் மொழிபெயர்த்திருக்கிறார். "திலகர் புராணம்" ஒன்றும் இயற்றத் தொடங்கி, சுமார் இருநூறு பாடல்கள் வரை இயற்றி வைத்திருந்த நிலையிலே அதன் கையெழுத்துப் பிரதிகளை யாரோ களவாடி அழித்து விட்டனராம். அந்தப் புராணம் வெளிவந்தால் அவர் அரசினரின் அடக்குமுறைக்கு ஆளாக நேருமென்ற அச்சத்தால் அவருடைய நண்பர்களில் ஒருவரே அதனை அழித்திருக்க வேண்டும் என்கிறார் திரு.வி.க. கவிதைத் தமிழ் வளர்த்த தேசியவாதிகளிலே கப்பலோட்டிய தமிழரும் ஒருவர் என்பதனை முன்னே அறிந்தோம். கவிதை நடையில் தமது சுய சரிதத்தை இயற்றிய முதல் தமிழர் அவர்தான் என்பதும் தெரிந்தோம். இவர் சிறையிலும் வெளியிலும் இயற்றிய தனிப்பாடல்தொகுப்பு 'தனிப்பாடல் திரட்டு' என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது. வீரவிளக்கு வ.வே.சு.ஐயர், கவிதை எதையும் எழுதிவைத்துப் போனதாகத் தெரியவில்லை. ஆனால், கவிதைகளையும் காப்பியங்களையும் நன்கு விமர்சிக்கும் திறமை அவருக்கு இருந்திருக்கிறது. இதற்கு ஐயர் இயற்றிய 'கம்ப ரசனை' என்ற நூல் சிறந்த சான்று. பாரதியாரின் "கண்ணன் பாட்டு”க்கு வ.வே.சு.ஐயர் தந்துள்ள முன்னுரை கவிதைத் தமிழிலே அவருக்கிருந்த பெரும் புலமைக்குச் சான்றாகும். "இஷ்ட தெய்வத்தைப் பல பாவங்களால் வழிபடலாகும் என்று நமது பக்தி சாஸ்திரங்கள் கூறுகின்றன. நமது ஆசிரியரும் இதை அனுசரித்துக் கண்ணனைத் தாயாகவும் தந்தையாகவும், எஜமானனாகவும், குருவாகவும், தோழனாகவும், நாயகியாகவும், நாயகனாகவும் பாவித்துப் பாடுகிறார். இவற்றுள், நாயகி பாவத்தைப்பற்றி இங்குச் சில மொழிகள் கூறாது விடமுடியவில்லை. இந்த பாவத்தை ஆளுவது கத்தியின் கூர்ப் பக்கத்தின் மீது நடப்பதைப் போன்ற கஷ்டமான காரியம். ஒரு வரம்பு இருக்கிறது; |