பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 165

அதற்கு   இப்புறம்    அப்புறம்  போய்விட்டால்,   அசந்தர்ப்பமாகிவிடும்.
ஸ்ரீ  பாகவதத்திலுங்  கூட  கோபிகா  உபாக்கியானங்களில்  சுக பகவான்
இவ்வரம்பை  அங்கங்கே  கடந்துவிட்டிருக்கிறார்  என்பது எனது தாழ்ந்த
அபிப்பிராயம்.

      "நமது  காவியம்  இப்பாவத்தை விரிக்கையில்  பர பக்தியை விடச்
சாரீரமான    காதலையே   அதிகமாக   வர்ணித்திருக்கிறார்.   ஆனால்,
சுகப்பிரம்மமே  நிறுத்த  முடியாததான  தராசு  முனையை  நம் ஆசிரியர்
நிறுத்தவில்லை என்று நாம் குறை கூறலாமா?"

     “இந்தக்  கீர்த்தனங்களைப் பரபக்திக்குப் பேரிலக்கியமாகக் கொள்ள
வேண்டுவதில்லை.  ஆசிரியர்  இந்நூலில்  கவி என்ற  ஹோதாவில் தான்
நம்மிடம் வருகிறார் என நினைக்க வேண்டும்"

     இந்த  விமர்சனம்  ஒன்றே  தமிழ்  மொழிக் கவிதை இலக்கியத்தை
அதற்குரிய  மரபை  ஒட்டி வளர்க்க வேண்டுமென்பதிலே தேசியப் பெருந்
தலைவர் வ.வே.சு. ஐயருக்கிருந்த ஆர்வத்தைப் புலப்படுத்தும்.

     தியாகி சுப்பிரமணிய சிவனார், கவிதை நூல் எதையும் தந்து விட்டுப்
போகவில்லை.   ஆயினும்,    இரண்டு   கவிதைகளை   மட்டும்  அவர்
இயற்றிவைத்துப்  போயுள்ளார்.  ஒன்று, தம்மை வாட்டிய குஷ்ட நோயின்
கொடுமை  தாளாமல் அழுதழுது பராசக்தியைத்தொழுது பாடியது. 'அம்மா,
தாயே!'  எனத்  துவங்கும்  இந்தப்  பாடல்,  கல்மனத்தையும்  கரைக்கும்
தன்மையதாகும்.  மற்றொன்று,  பாரத   நாட்டின்   பழம்பெருமையையும்,
பாடியவர்  காலத்து  அந்நாடு  அடைந்திருந்த சிறுமையையும் வருணித்து,
எதிர்காலத்தில்  விடுதலை  பெற்ற  பொன்னாடாக விளங்க இறைவனைப்
பிரார்த்திக்கும்  கவிதையாகும்.   சிவனார்   பாடி  வைத்துள்ள  இரண்டு
கவிதைகளும்   கவிதைத்    தமிழை    வளர்ப்பதிலே   அவருக்கிருந்த
ஆர்வத்தைக் காட்டுவனவாகும்.

     சங்க   இலக்கியத்   தொகுப்புக்களான  'பத்துப் பாட்டு'   'எட்டுத்
தொகை'     நூல்களை    ஆராய்ந்தால்,    இரண்டே    பாடல்களைப்
பாடியுள்ள   கணியன்   பூங்குன்றனார்  உலகம்   புகழும்  பேராசானாக
விளங்கக்  காண்கின்றோம். ஆம்;  அவர்  பாடல்களில்  ஒன்றின்  முதல்
வரியாகிய   'யாதும்   ஊரே;  யாவரும்   கேளிர்'    என்ற    வாசகம்,
தமிழினத்தின்   புகழை    உலகெங்கும்   பரப்பி     வருகின்றது.  ஒரு
புலவரின்   பெருமை,  அவர்   இயற்றிய   கவிதைகளின் எண்ணிக்கைப்