கொட்டடா', 'ஜெய வந்தே மாதரம்', 'பாரத சமுதாயம் வாழ்கவே',
'அச்சமில்லை, அச்சமில்லை' என்ற பாடல்களே முழங்கும். இசை பாடி
ஊர்வலம் சென்றால், ஊர்வலத் தொண்டர்கள் வசையொலிக்கோஷங்கள்
எழுப்ப வாய்ப்பற்றவராகி விடுகின்றனரல்லவா? ஊர்வலம் நீளமாக
அமைந்துவிட்டால், ஊர்வலத் தொண்டர்கள் குழு குழுவாகப் பிரிந்து
செல்வர். ஒவ்வொரு குழுவிலேயும் முதலிலே ஒருவர் பாடிச் செல்ல,
அவரைப் பின்பற்றி மற்றவர்கள் பாடி நடைபோடுவர். பொதுக் கூட்டங்களில் எதிர்பாராத வகையில் குழப்பம் ஏற்பட்டு
விடுமானால், அமைதியைத் தோற்றுவிக்க, உணர்ச்சியூட்டி மெய்மறக்க
வைக்கும் தேசியப் பாடல்கள் பாடப்படும்.
அந்தக் காலத்திலே...!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தமிழகத்தின் தலைநகரிலே தொடர்ந்து
பலவார காலம் "இசை விழா” நடத்தியதென்று சொன்னால், கேட்போர்
வியப்படைவார்கள். அப்படியும் நடந்தது அந்தக் காலத்திலே!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நடைபெற்ற ஒரு இசை
விழாவிலே நாவலர் எஸ்.சத்தியமூர்த்தி ஐயர் நிகழ்த்திய வரவேற்புரையின்
ஒரு பகுதியை இங்கு பார்ப்போம்.
"தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக நடக்கிறது இந்த சங்கீத
விழா. என்னுடைய மதிப்பிற்குரிய நண்பரும் பிரபல சங்கீத வித்வானுமான
ஸ்ரீமான் டைகர்வரதாச்சாரியார் இதைத் திறந்து வைக்கிறார்.
இக்கொண்டாட்டத்திற்கு எல்லோரையும் இங்கு வரவேற்பதில் எனக்கு
மட்டற்ற மகிழ்ச்சி. ஒரு கால் சிலர், "காங்கிரஸ் ஒரு சங்கீத விழாவை
நடத்துகிறதே! இது அதிநூதனமாக அல்லவா இருக்கிறது?" என்று
நினைக்கலாம். காங்கிரஸ் ஸ்தாபனத்தின் உட்கருத்தை உணருவோருக்கு
அந்த ஆச்சரியம் மறைந்துவிடும். ஸ்வராஜ்யம் பெருவதற்காகத்
தொண்டாற்றுகிறது காங்கிரஸ். அது அந்நிய ஆட்சியிலிருந்து தாய்நாடு
விடுதலை பெறுவதற்காக மட்டும் சேவை புரியவில்லை. தாய்நாட்டின்
ஜீவநாடி புத்துயிர் பெறுவதற்காகவும் அது வேலை செய்கிறது.