திரு.வி.க. தந்த திருப்பம் தமிழ்ப் பெரும் புலவர்களிலே திரு.வி.கலியாணசுந்தரனார் ஒருவர்
மட்டும் இதற்கு விலக்காக வாழ்ந்தார். அவரும் 'தூய தமிழ்' அல்லது 'தனித்
தமிழ்' வைதிகத்தைப் படிப்படியாக விட்டுக் கொண்டு வந்ததனாலேயே
தேசியவாதிகளுடன் இணைவது சாத்தியமானது. அந்நாளில், போதிய கல்வி
அறிவு பெற வாய்ப்பற்றவர்களாக இருந்த தொழிலாளர்களின் தலைவராகவும்
திரு.வி.கலியாணசுந்தரனார் விளங்கினாரென்றால், மொழித் துறையில் அவர்
வைதிகத்தைக் கைவிட்டதே அதற்குக் காரணமாகும். இதனை அவரே
கூறக் கேட்போம்:
"சங்கநூற் சொற்களும் சொற்றொடர்களும், பழைய உரையாசிரியர்
சொற்களும், சொற்றொடர்களும் என்னிடத்தில் நடம்புரிந்த காலம் உண்டு.
அந்நாடகம் யான் நடித்த வேளையில் பெருநூல் எழுதும் வாய்ப்பு எனக்கு
நேரவில்லை. துண்டு வெளியீடுகளும், நன்றி அறிக்கைகளுமே பெரிதும்
என்னால் எழுதப்பட்டன.
"1917ம் ஆண்டில் பத்திரிகை உலகை யான் நண்ணிய போது
அதற்கென ஒரு தனிநடை கொண்டேன். அதுவே எனக்குரிய நடையாய்
என்னில் நிலைத்தது."1
"என்னுடைய வாழ்க்கையில் மூவித நடைகள் மருவின. ஒன்று
இளமையில் உற்றது; இன்னொன்று சங்க இலக்கியச் சார்புபெற்றபோது
பொருந்தியது; மற்றொன்று பத்திரிகையுலகை அடைந்த நாளில் அமைந்தது.
இறுதியதே எனக்கு உரியதாய்- உடையதாய்-நிலைத்தது. இந்நடை எளியது,
சிறு சிறு வாக்கியங்களாலாவது."
"செவ்விய தமிழ்நடை, தமிழ் நாட்டிலுள்ள பல்லோர்க்கு இதுபோழ்து
பயன்படாதென்று கருதித் "தேசபக்த"னுக்கெனச் சிறப்பாக ஒருவகை
உரைநடையைக் கொண்டுள்ளேன்."2
திரு.வி.க. வரைந்துள்ள இந்தக் கருத்தோவியம், அவர் தமது
உரைநடையை மாற்றிக் கொண்டு, சாதாரண மக்களை நெருங்கித்