தொண்டு புரிந்த நிகழ்ச்சியை நமக்குக் காட்சிப் படுத்துகின்றது. ஆம்; பொதுமக்களோடு தொடர்பு கொள்ள விரும்பும் எவரும் தூய தமிழ் வைதிகத்தைக் கடைப்பிடிப்பது சாத்தியமில்லை. 'தனித் தமிழ்' உணர்ச்சியையும் ஒருவகையில் வரவேற்கலாம். ஆனால், அது, பழகு தமிழுக்குப் பகையாகிவிடக்கூடாது. இன்று நாட்டிலே எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் கவிஞர்களும் நாளுக்குநாள் பெருகிவருகின்றனரென்றால், அவர்களிலே பலர் தமிழ் மக்களால் போற்றப்படும் பெருமையினையும் பெற்று வாழ்கின்றனரென்றால், விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழ் நடையிலேற்பட்ட மகத்தான மாறுதலே அதற்குக் காரணம் எனலாம். பாரதியாரின் தமிழ் நடை இருபதாம் நூற்றாண்டில் முதற் பத்தாண்டு காலத்திலே தமிழ் உரைநடையில் விறுவிறுப்பையும், வேகத்தையும் கலந்த தேசியவாதிகளிலே மகாகவி பாரதியாரே முதலிடம் பெறுகிறார். 1907ஆம் ஆண்டில், லோகமான்ய பாலகங்காதர திலகர் ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றபோது தமது "விஜயா" நாளிதழிலே பாரதியார் எழுதிய தலையங்கத்தின் ஒரு பகுதி வருமாறு: "திலகரை ஸர்க்கார் அதிகாரிகள் சிறையிலிட்டு விட்டனர்... பாரதநாடு முழுமையும் - ஒருசில விலக்குகள் ஒழிய - திலகர் சிறையுண்டவுடன் ஆற்றொணாத் துக்கமடைந்தது. இங்கிலாந்தில் பார்லிமெண்ட் மெம்பர்களிலே பலர் திலகரைச் சிறையிட்டது பெரிய அநீதியென்கிறார்கள். ஐரோப்பாவில் நீதி அபிமானம் கொண்ட பத்திரிகைகளெல்லாம் திலகர் தண்டனையடைந்தது பற்றி வருத்தம் பாராட்டுகின்றன. உலகத்தில் எந்தப் பிரதேசத்திலும், இவ்விஷயத்தைப் பற்றிக் கேள்வியுற்ற நிஷ்பக்ஷபாதமான ஜனங்கள் யாவரே யாயினும் அவர்கள் எல்லோரும் திலகருக்கு விதித்த தண்டனை வெறும் அநீதி என்கிறார்கள். இவர்கள் எல்லோரும் திலகர் கூட்டந்தான். சூரியனை அவித்தாலும் அவிக்கலாம் மேருமலையை வெட்டி எறிந்தாலும் எறிந்துவிடலாம். திலகர் கூட்டத்தை ஹதம் செய்ய முடியாது. "ஏனெனில் திலகர் பக்ஷத்திலே நியாயமிருக்கிறது. தர்ம மிருக்கின்றது. ஈசனிருக்கிறார். திலகர் என்ன சொல்லுகிறார்? |