துரத்திப் பிடுங்குகின்றது. ஏ! பணங்காக்கும் பூதங்களே! உங்களுக்கு
அநந்தகோடி நமஸ்காரம். தன்னுடைய சகோதரர்கள் இல்லாமையினால்
இரக்கின்றார்கள் சிறிது தயவு செய்யுங்கள். உங்களுடைய கல்லான
ஹிருதயம் இளகட்டும். உங்களுடைய இரும்பு நெஞ்சம் இளகட்டும்!" இதிலே, வடமொழிச் சொற்கள் தேவைக்கதிகமாகவே வந்திருப்பினும்,
நடையிலே உயிர்த் துடிப்பு இருக்கிறது. ஒவ்வொரு சொல்லிலேயும் சிவாவின்
இதயத் துடிப்பு பிரதிபலிக்கிறது. இதே நடையில் பேசியதாலும்
எழுதியதாலும் தான் சாதாரண மக்களை வேறு எந்தத் தேசியத் தலைவரை
விடவும் அதிக அளவில் நெருங்கி, அவர்களுடைய நெஞ்சங்களில்
எல்லாம் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்ச்சியை வளர்க்க அவரால் முடிந்தது.
பிரசுரம் பேசுகிறது!
விடுதலைப் பாசறையிலிருந்து வெளிப்பட்ட ஒரு பிரசுரத்தின் தமிழ்
உரைநடையையும் பார்ப்போம்:
"காலையில் கண் விழித்தேன். கண்முன் நின்ற கோரக்காட்சியை
என்னென்பேன். பாரதத் தாயே! என்ன இக்கோலம்! கையில் விலங்கென்ன?
தலைவிரித்திருப்பதென்ன? மேலெல்லாம் இரத்தம் ஆறாக ஓடுவதென்ன?
கண்ணிலும் ரத்தக் கண்ணீர் ஒழுகுவதென்ன? அம்மா! உடம்பெல்லாம்
காயமென்ன? வீக்கமென்ன? ஐயோ! என்ன கோலமிது! யாருனக்கு
இத்துன்பம் இழைத்தது? சொல்லுடனே! பேசாதிருப்பதென்ன? என் இரத்தம்
கொதிக்கிறது, நாக்கு உலர்கிறதே..."1
இது, 1932 மார்ச் 6 - ஆம் நாளிலே -சட்டமறுப்புப் போராட்ட
காலத்திலே மதுரை நகர 22 ஆவது சர்வாதிகாரி பத்மாஸனி அம்மாள்
பெயரால் வெளியான பிரசுரத்தின் ஒரு பகுதியாகும். தேசிய வீரனொருவன்,
அழுத கண்ணீருடன், அலங்கோலமான தோற்றத்தில் பாரத அன்னையைக்
கண்டு, அவளுடைய அவல நிலைக்குக் காரணங் கேட்பதுபோல்
அமைந்துள்ளது வாசகம். விடுதலை வீரனுக்குப் பாரததேவி சொல்லும் பதில்
வருமாறு:
1. 'பத்மாசினியம்மாள் வரலாறு' பக்.1