"ஞான ரதம்" என்ற தலைப் பெயருடன் தமிழ்நாடு என்றும் கண்டிராத
துள்ளிக் குதிக்கும் புதிய கந்தர்வ நடையில் இயற்கையின் அழகுகளைப்
பற்றியும், தேசச் செய்திகளைப் பற்றியும், நெருங்கிய நண்பர்களின்
மனமாறுபாடுகளைப் பற்றியும் அற்புதமான கற்பனையுடன் வாரந்தோறும்
'இந்தியா'வில் எழுதிவந்தார். அவற்றை ஒருங்கு சேர்த்து 'ஞான ரதம்' என்று
புத்தகமாக வெளியிட்டார். அதற்கு இணையான நூல் தமிழ் மொழியில்
இல்லை. சொற்சுவை பொருட்சுவை நிரம்பியது. பாச்சுவை பரவிய நடையில்
அமைந்தது.
"இந்நூல் சென்னையிலே தொடங்கப் பெற்றிருக்கிறது.
திருவல்லிக்கேணியிலே வீரராகவ முதலி தெருவில் ஒரு மாலை நேரத்தில்
பாரதியார் சிரம பரிகாரத்தின் பொருட்டு ஒரு மஞ்சத்தில் படுத்திருப்பதாக
நூலின் பீடிகை தொடங்குகிறது. ஞான ரதத்திலேறிப் பல உலகங்களுக்குப்
பறந்து சென்ற அவர் தர்ம லோகத்திலிருந்து தவறி விழுந்து
மூர்ச்சைபோட்டு பழைய திருவல்லிக்கேணி இல்லத்திலேயே கண்விழித்ததாக
நூல் முடிகிறது."1
புதுமைக் கவி பாரதியாரின், "ஞான ரதம்" பற்றி புதுவைக்கவி
பாரதிதாசனார் வருணிக்கையில், "ஞான ரதம்போல் ஒரு நூல் எழுதுதற்கு
நானிலத்தில் ஆளில்லை" என்று கூறுவாரானால், அந்நூலின் சிறப்பை
உணர்த்துவதற்கு வேறு சான்றும் வேண்டுமோ!
விடுதலைப் பாசறையிலேயே தங்கள் ஆயுளின் பெரும் பகுதியைக்
கழித்த தேசபக்தர்கள், கதைகள் எழுதியும், கட்டுரைகள் வரைந்தும்,
பத்திரிகைகள் நடத்தியும், நாடகங்கள் புனைந்தும் உரைநடைத் தமிழை
வளப்படுத்தியதோடு, அதனைக் கருவியாகக் கொண்டு நாட்டிலே கருத்துப்
புரட்சியையும் விளைவித்தனர்.
வ.வே.சு.ஐயர், 'மங்கையர்க்கரசி முதலிய கதைகள்' என்னும் சிறுகதைத்
தொகுப்பு நூலொன்றைப் படைத்தார். "கம்ப ரசனை" என்னும் பெயரில்
அவர் படைத்த விமர்சன நூல் அவரது உரை நடையின் சிறப்புக்கு
எடுத்துக்காட்டாகும்.
வடமொழியோடு இரண்டறக் கலந்திருக்கும் வேதாந்த
சாத்திரங்களை மணிப் பிரவாள மொழியில் அல்லாமல் நல்ல
தமிழிலே எழுதி வழங்கிய சுப்பிரமணிய சிவாவின் தொண்டு
1. 'சென்று போன நாட்கள்' என்ற நூலில்