தந்துள்ளார். புக்கர் வாஷிங்டன், சந்திரகுப்தன், அகஸ்தின், வீரரத்தின பாஜிப் பிரபு (வீரசிவாஜியின் தளபதி) ஆகியவர்களின் சரித்திரங்களை வ.வே.சு. ஐயர்தம்முடைய 'பால பாரதி'யில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். மார்க்க அரேலியர், சோக்ரதர் (சாக்ரடீஸ்) ஆகிய மேனாட்டுச் சான்றோர்களின் வாழ்க்கைக் குறிப்புகளையும், அவர்களுடைய வாக்குகளையும் அறிஞர் ராஜாஜி தமிழிலே தந்துள்ளார். வீர சாவர்க்கர் 1907 ஆம் ஆண்டிலே லண்டனில் வாழ்ந்தார். அக்காலத்தில் "1857 சுதந்திரப் போர்" என்னும்நூலை இயற்றினார். ஆம்; ஏகாதிபத்திய எழுத்தாளர்களால் 'சிப்பாய்க் கலகம்' என்று வருணிக்கப்பட்ட உரிமைப் புரட்சிக்குச் "சுதந்திரப் போர்" எனப்பெயர் தந்து, அதற்கான சான்றுகளையும் காட்டினார். மராத்தியிலும், ஆங்கிலத்திலும் அவர் எழுதிய இந்த நூல் 1928 ஆம் ஆண்டில் முதன் முதலாக தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது. மூல நூல் இந்தியாவிலும் பிரிட்டனிலும் பறிமுதல் செய்யப் ்பட்டிருந்ததால், தமிழ்மொழி பெயர்ப்பை வெளியிட்டவர்களும், அதனைப் பரப்புகின்ற பணியில் பங்கு கொண்டவர்களும் அரசினரின் அடக்குமுறைக்கு ஆளாயினர். அவர்களிலே சிலர் சிறைத் தண்டனையும் பெற்றனர். ஆம்; விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழிலே அறிவுநூல் ஒன்றை வெளியிட வேண்டுமானால், சிறைத் தண்டனைக்கும் துணிந்துதான் அதனைச் செய்ய வேண்டியிருந்தது. காந்தியடிகள் குஜராத்தி மொழியில் எழுதி வெளியிட்ட "சத்திய சோதனை" என்னும் நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு விடுதலைப் போராட்ட காலத்திலே வெளியிடப்பட்டது. 'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி இதனை மொழி பெயர்த்தார். இந்த மொழி பெயர்ப்பு வெளியானபின் ஆயிரமாயிரம் தமிழர்கள் அதனைப் படித்து காந்தியவாதிகளாக மாறினர். திரு.வி.க. எழுதிய "மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்" என்னும் நூல் அடிகளார் எழுதிய சத்திய சோதனைக்கு விமர்சனமாக அமைந்தது. பழமையிலே புதுமை! தேசியவாதிகள் பழைய புராணங்களுக்குப் புதிய ஒளியைக்காட்டி, அவற்றைத் தேசிய ஒருமைப்பாட்டுக்குப் பயன்படுத்தினர். |