'வள்ளித் திருமணம்' நாடகத்திலே, தினைப்புனத்தில் பரண் மீது நின்று
வள்ளி ஆயலோட்டும்போது, தினையரிசிகளைக் கொத்தித் தின்னவரும்
குருவிகளை ஆங்கிலேயர்களாகக் கற்பித்துக் கொண்டு, "வெள்ளையனே
வெளியேறு" என்னும் பொருள்பட வள்ளி பாடுவாள். ஆம்; 1942 ஆகஸ்டுப்
புரட்சிக்கு முன்பே!
வெள்ளை வெள்ளை கொக்குகளா வெகு நாளாய் இங்கிருந்து
கொள்ளை யடித்தீர்களே ஆலோலங்கடிச்சோ - இனி
கோபம்வரும் போய்விடுங்கோ ஆலோலங்கடிக்சோ!
காந்தி மகத்துவத்தால் கதிர்கள் விளைந்து இங்கே
சாய்ந்து கிடக்குதென்றா ஆலோலங்கடிச்சோ - இங்கு
தட்டிப் பறிக்க வந்தீர் ஆலோலங்கடிச்சோ!
இந்தியாவைக் கொள்ளையிட எங்கிருந்தோ இங்குவந்து
குந்தித் தின்னும் குருவிகளா ஆலோலங்கடிச்சோ - உங்கள்
சொந்த நாட்டைத் தேடிப் போங்க ஆலோலங்கடிச்சோ!
எந்த நாடகமாயிருந்தாலும் சரி; அந்த நாடகத்திலே எந்தக் காட்சியாக இருந்தாலும் சரி; மக்கள் ஒரு தேசியப்பாட்டைப் பாடும்படிக் கேட்டு
விட்டால், அதைப் பாடி ரசிகர்களைத் திருப்தி செய்விக்காமல் மேலே
நாடகத்தை நடத்திச் செல்ல முடியாது. ஆம்; தேசாவேசம் உச்சநிலையில்
இருந்த காலம் அது! தேசபக்தியானது தமிழ்ப் பற்றோடு பிணைந்து வளர்ந்த
காலமுமாகும்.
கரூர் நகரிலே ஒரு சமயம் நடத்தப்பட்ட ஏதோ ஒரு நாடகத்திலே,
தேசியப் பாட்டொன்றைப் பாடும்படி ரசிகர்கள் கோரினர். கொட்டகையி
லிருந்த போலீஸ் அதிகாரி அந்தப் பாட்டு பாடப்படுவதை விரும்பவில்லை.
ஆனால், நடிகரை மக்கள் விடவில்லை. பாடியே தீரவேண்டுமென்று
வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், பெருத்த அமளி ஏற்பட்டு, கொட்டகைக்குள் போலீஸ்படை புகுந்து, தேசாவேசம் பிடித்த மக்கள் மீது
பலாத்காரத்தைப் பிரயோகித்து அவர்களை வெளியேற்றியது அடக்குமுறைக்
கொடுமைக்கு ஆளாயினர். அந்த அடக்குமுறையை நேரில் கண்டவர்கள்
தரும் தகவல் வருமாறு:
'...அச்சமயம் கரூரின் நிலைமை மிகவும் மோசமாக
இருந்தது. நாடகக் கொட்டகையில் தேசியப் பாட்டு பாடாத