நாவலர் சத்தியமூர்த்தி சுகுணவிலாச சபையில் நடித்து வந்த காலத்தும் அரசியல் வாதியாகவும் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் இருந்தார்.ஆயினும், நாடக மேடையை ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த அவர் முயலவில்லை. நாடகத்தமிழை வளர்க்கப் பாடுபட்ட தேசியவாதி என்ற அளவில்தான் அவரை 'சுகுண விலாச'சபை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. சீர்திருத்தக் கிளர்ச்சி சத்தியமூர்த்தி, நாடகத் துறையில் சீர்திருத்தம் ஏற்பட வேண்டியதன் அவசியம்பற்றி, வாய்ப்பு நேர்ந்தபோதெல்லாம் வற்புறுத்தி எழுதியும் பேசியும் இருக்கிறார். அவர் வெளியிட்ட கருத்துக்களில் சில வருமாறு: "நம் நாட்டு நாடக மேடை மீது ஸ்ரீராமன், ஸ்ரீ கிருஷ்ணன் போலவெல்லாம் வேஷம் புனைந்து நடித்துக் காட்டுகின்றனர். நமது நம்பிக்கை, சம்பிரதாயம் இவற்றை அனுசரித்து ஸ்ரீ ராமன் போலவும், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைப் போலவும் நடிப்பதற்கு இடமிருக்கிறதென்பதை நான் அறிவேன் . ஆனால், நாடக வெற்றியை முன்னிட்டு மத உணர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்வது கலை அம்சத்துக்கு அழகன்று. அது மதமும் ஆகாது. "12 வயது முதல் 15, 16 வயதுக்குப்பட்ட சிறுவர்களையெல்லாம் பெரிய வயதுவந்த ஆண்களைப் போலவோ பெண்களைப் போலவோ வேடம் போட்டு நடிக்கச் சொல்லுகின்றனர். இதன் பலன் என்ன தெரியுமா? சிறுவர்கள் பக்குவம் வருமுன்னர் நடிக்கவேண்டி வருகிறது. அவர்களுக்கு என்ன செய்கிறோம், பேசுகிறோம் என்று அர்த்தம்கூடத் தெரியவில்லை. நாடக மேடைமீது ஏதோ யந்திரம்போல நடிக்கின்றனர். நடிப்பு இயற்கைக்கு மாறாகவே இருக்கிறது. தத்ரூபமாக இல்லை. இது ரஸிகர்களுடைய ருசியின் தரத்தைக் குறைத்து விடுகிறது. எனவே நாடகத்தின் தரமும் சீர்கெட்டு விடுகிறது." "இதில் மனித வர்க்கத்திற்கே தகாத அம்சமொன்றும் இருக்கிறது.இதைப் போலீசாரோ, மாஜிஸ்திரேட்டுகளோ கவனிக்காமல் இருப்பதற்காக நான்வருந்து கின்றேன். சமூக சீர்திருத்தவாதிகளும் இந்த அம்சத்தைக் கவனிக்கவில்லை. சிறுவர்கள் பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டிய பருவத்திலும் மூளையையும் |