கோலையே கோடரியாகக் கொண்டு, ஏகாதிபத்தியமென்னும் நச்சுமரத்தை வெட்டி வீழ்த்த அரும்பாடுபட்டார். பாரதியார், 'சக்கரவர்த்தினி' - 'கர்ம யோகி' ஆகிய இலக்கிய மாத இதழ்களை நடத்தினார். 'இந்தியா' என்னும் அரசியல் வார இதழை நடத்தி விடுதலைப்போருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தார். 'விஜயா' என்னும் பெயரில் நாளிதழ் ஒன்றையும் சிறிது காலம் நடத்தினார். ஆனால், 'இந்தியா'தான் அரசியல் துறையிலே அவருக்குப் புகழ் தேடித் தந்த பத்திரிகையாகும். இந்நாளில், 'கார்ட்டூன்' மூலம் கருத்து வெளியிடுதல் மிகச் சிறந்த கலையாக இருந்து வருகின்றது. தமிழ்ப் பத்திரிகையில் முதன் முதலாகக் 'கார்ட்டூன்' வெளியிட்டவர் பாரதியாரே யாவார். தாம் நடத்திய 'இந்தியா' வார இதழில் முகப்புப் பக்கத்திலே சுதந்திர உணர்வை ஊட்டத்தக்க 'கார்ட்டூன்'களை வெளியிட்டு வந்தார். "அந்தக் காலத்தில் 'இந்தியா'வுக்குப் பெரும் புகழும் பெருஞ் செல்வாக்கும் இருந்தன' என்று வ.உ.சி. கூறுகின்றார். "தென்னாட்டைத் தட்டியெழுப்பிய பெருமை 'இந்தியா' பத்திரிகைக்கு உண்டு" என்று புகழ்ந்துரைக்கின்றார் திரு.வி.க. திரு.வி.க. தமிழ்ப் பத்திரிகை உலகிலே திரு.வி.கலியாணசுந்தரனர் தனிச் சிறப்புடன் விளங்கினார். இவர் ஜி.சுப்பிரமணிய ஐயர், பாரதியார் ஆகியவர்களோடு சேர்த்து மதிப்பிடத்தக்க பெருமையைப் பெற்றவராவார். தம் தாய் மொழியான தமிழ் தன்னேரில்லாத் தமிழ்மொழி என்ற சிறப்பினை விளக்கும் வகையில் பத்திரிகைத் துறையிலே பணிபுரிந்தார். அந்த வகையில் தம் காலத்தில் தமிழ்ப் பத்திரிகை நடத்தியவர்களுக்கெல்லாம் இவர் வழிகாட்டியாக விளங்கினார். மிகச் சிறந்த தேசியவாதியாக விளங்கிய சுப்பராய காமத் என்பவருடன் சேர்ந்து, 7-12-1917ல் 'தேசபக்தன்' என்னும் பெயரில் தமிழிலே நாளிதழொன்றைத் தொடங்கி நடத்தினார். ராஜாஜி, டாக்டர். பி.வரதராசுலு நாயுடு, டாக்டர் .டி.எஸ்.எஸ்.இராசன், ஈ.வே. இராமசாமி, ஆதி நாராயண செட்டியார், ஜார்ஜ் ஜோசப், லாட் கோவிந்த தாஸ் ஆகிய தேசியவாதிகள் 'தேசபக்தன்' |