ஐயர் அகால மரணமடைந்த பின்னர், அதுவரை 'பாலபாரதி'யின் துணையாசிரியராக இருந்துவந்த யோகி சுத்தானந்த பாரதியாரவர்கள் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். அதன் பின்னர், இரண்டு அல்லது மூன்று இதழ்களுக்குமேல் வெளிவந்ததாகத் தெரியவில்லை. "தமிழ்நாடு" அந்நாளில், 'தென்னாட்டுத் திலகர்' என்றழைக்கப் பெற்ற டாக்டர் பி.வரதராசலு நாயுடு அவர்கள் 'தமிழ்நாடு' என்ற நாளிதழொன்றைத் தொடங்கி, பல ஆண்டு காலம் தொடர்ந்து நடத்தினார். அதன் தமிழ் நடையைப் புகழ்ந்துரைக்கையில் 'ஆற்றல்மிக்க பழகு தமிழில் 'தமிழ்நாடு' வெளி வந்ததால் 'சுதேசமித்திரனுக்குப் பலத்த போட்டியாக விளங்கியது" என்கிறார் பத்திரிகைத் துறையில் அனுபவம் பெற்றவரான ஏ.என்.சிவராமன். 'தமிழ்நாடு' நாளிதழ் ஒரு கட்டத்தில் காங்கிரசுக்கு எதிரியாகிவிட்டதால், 1930ல் 'இந்தியா' என்ற தமிழ் நாளிதழ் காங்கிரஸ்காரர்களால் தொடங்கப் பெற்றது. 1934ல் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' என்ற ஆங்கில நாளிதழை நடத்தி வந்த “ப்ரீபிரஸ் ஆப் இந்தியா" நிறுவனத்தாரால் 'தினமணி' தமிழ் நாளிதழ் தொடங்கப்பெற்றது. "ஜெய பாரதி" என்ற தமிழ் நாளிதழ் 1933ல் தொடங்கப்பெற்று 1940 வரை நடைபெற்றது. 1942ல் 'தந்தி' என்ற தமிழ் நாளிதழ் திரு.சி.பா.ஆதித்தன் அவர்களால் தேசிய ஏடாகவே தொடங்கப் பெற்றது. இந்தத் 'தந்தி'யின் வாயிலாக தினசரிப் பத்திரிகைத் துறையில் பிரவேசித்த சி.பா.ஆதித்தனார், இன்று தமிழ்ப் பத்திரிகையுலகில் முன்னணியில் நிற்கிறார். போதிய மொழிப் புலமையற்ற எளியவர்களும் தமிழ் நாளிதழைப் படித்து உலகியல் அறிவை வளர்த்துக்கொள்வதற்கு சி.பா.ஆதித்தனார் நன்கு தொண்டாற்றியுள்ளார். இந்தியப் பத்திரிகைகள் 1857ல் வடபுலத்தில் பொங்கியெழுந்த அரசியல் புரட்சிக்கு முன்னர் சமூக சீர்திருத்தப்பணிகளில் மட்டுமே அக்கறை காட்டின. புரட்சி ஒரே ஆண்டில் அடங்கிவிட்டதென் றாலும், அதன் விளைவாக, பாரதமக்கள் உள்ளங்களில் கனன்று கொண்டிருந்த உரிமை உணர்ச்சி காரணமாக, இந்திய மொழிகளில் புதிது புதிதாகப் பத்திரிகைகள் தோன்றின. அவை, பிரிட்டிஷ் |