விடுதலைப் பேராட்டத்திற்குத் தீவிரமாக ஆதரவு காட்டி வந்த
தேசியப் பத்திரிகைகளில் சொந்தத்தில் அச்சகம் இல்லாத பத்திரிகைகளே
பெரிதும் அல்லலுற்றன. அவற்றை அச்சடித்துக் கொடுக்க அச்சகக்காரர்
அஞ்சினர். இத்தகைய பத்திரிகைகளில் சில திடீரென நிறுத்தப்பட்டன.
சுப்பிரமணிய சிவா, சொந்தத்தில் அச்சக மில்லாததால் 'ஞானபாநு'
பத்திரிகையை நடத்தப் பெரிதும் அல்லலுற்றார். அவரது பத்திரிகையை
அச்சடித்துக் கொடுத்த அச்சகத்தார் தொடர்ந்து அச்சடிக்கத் திடீரென
மறுத்தபோது தமக்கேற்பட்ட தொல்லையை அவர் தமது
நண்பரொருவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அது வருமாறு!
"நமது பத்திரிகையை மகாஸ்ரீ ஷண்முக முதலியார் அச்சடித்துக்
கொடுக்க மறுக்கின்றார். அச்சுச் சட்டத்திற்குப் பயப்படுவதாகக்
கூறுகின்றார். சென்ற இரண்டு வாரங்களாக எனக்கும் அவருக்கும் பெரும்
விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது. வேறு ஏதேனும் அச்சுக் கூடம்தான்
நான்தேடவேண்டும். அன்னிபெஸண்டைப் பார்த்துத் தக்க ஏற்பாடுகள்
செய்யலாமென்று யோசனை செய்து கொண்டிருக்கிறேன்.
"இப் பத்திரிகையை ஆரம்பித்ததிலிருந்து நான் படும் கஷ்ட
நஷ்டங்கள் இவ்வளவென்று சொல்ல முடியாது. என்னவோ, ஈச்வர
சித்தம் எப்படியோ, அப்படியே நடக்கும்."1
இவ்வளவு தொல்லைக ளிருப்பினும் தமிழ்ப் பத்திரிகைகளை
நடத்திய தேசபக்தர்கள் சளைக்கவில்லை. தங்களுக்கிருந்த மாசுமறுவற்ற
நாட்டுப் பற்று காரணமாக, தேசாவேசத்தை மக்களிடையே வளர்க்கும்
வகையில் பத்திரிகைகளை நடத்தினர். ஏகாதிபத்தியம் யாரையெல்லாம்
இராஜத்துவேஷிகளாகவும் புரட்சிகாரர்களாகவும் கருதியதோ,
அவர்களையெல்லாம் தேசிய வீரர்களாக நினைத்து, அவர்களுடைய
எழுத்துக்களைத் தங்களுடைய ஏடுகளிலே பிரசுரித்து வந்தனர்.
பேனா வீரர்கள்
சிவா நடத்திய 'விவேகபாநு'விலே, வ.உ.சிதம்பரம் பிள்ளை,
வ.வே.சு.ஐயர், சுப்பிரமணிய பாரதியார் ஆகியோரின் எழுத்தோவி
1. பாப்பாரப்பட்டி சின்னமுத்து முதலியாருக்கு எழுதியது.