எதிர்ப்புக்காட்டினார். தாம் நடத்திய 'நவஜீவன்' குஜராத்தி வார இதழில்
விளம்பரங்களை வெளியிடுவதில்லையென்ற விரதத்தைக் கடைப்பிடித்தார்.
நாடு முழுவதும் பல பத்திராதிபர்கள் அடிகளாரைப் பின்பற்றி, தத்தம்
பத்திரிகைகளிலே விளம்பரம் வெளியிடுவதைத் தவிர்த்தனர். தமிழ்
நாளிதழ்களிலே 'ஜெயபாரதி' ஒன்றுதான் விளம்பரம் வெளியிடாவிரதத்தைக்
கடைப்பிடித்தது.
தமிழ் நாளிதழ்களில் பல ஓரணா விலையில், வெளிவந்து
கொண்டிருந்த காலத்திலே, 'ஜெய பாரதி' மட்டும் காலணாவிலையில் -
வெளிவந்தது. மதுரைத் தேச பக்தர்கள் பலர்கூடி, 'தேசோபகாரி' என்ற
பெயரில் காலணா விலையில் நாளேடு வெளியிட்டனர். சொற்பகாலமே
வெளிவந்த இந்த ஏடு காங்கிரசை சோஷலிசக் கட்சியாக மாற்றிவிட
முயன்றது.
சி.சுப்பிரமணிய பாரதியார், தாம் நடத்திய 'இந்தியா' பத்திரிகையின்
விலையிலே ஒரு புதுமையை - புரட்சியை நிகழ்த்தினார். அதாவது தமது
பத்திரிகையின் விலையை, வாங்குவோரின் பண வசதிக்கேற்ப நிர்ணயித்தார்.
இதன்படி, பிரபுக்கள், 'ஜமீன்தார்கள்' அரசாங்கம் ஆகியோருக்கு அதிக
விலைக்கும் மற்றவர்களுக்குக் குறைந்த விலைக்கும் 'இந்தியா' இதழ்கள்
விற்கப்பட்டன.
காலணா விலையில் வெளிவந்த 'சுதந்திரச் சங்கு' என்ற தமிழ்வார
ஏடு, விடுதலைப் போரில் தேசபக்தர்களின் கேடயமாகப் பயன்பட்டது.
பொதுமக்களிடையே ஏகாதிபத்திய எதிர்ப்புணர்ச்சியை வளர்க்க இந்த ஏடு
ஆற்றியுள்ள தொண்டு போற்றற்குரியதாகும். இதன் ஆசிரியர்,
திரு.சுப்பிரமணியம், இதனை வெளியிட்டவர். எஸ்.கணேசன், இவர்கள்,
'சங்கு கணேசன்' என்றும் 'சங்கு சுப்பிரமணியம்' என்றும் அழைக்கப்
படுமளவுக்கு அந்த ஏடு அந்நாளில் தமிழ் மக்களிடையே செல்வாக்குப்
பெற்றிருந்தது.
கவிஞர். ச.து.சுப்பிரமணிய யோகியார், தம்பிடி விலையில் 'பால
பாரதி' என்ற நாளிதழை சொற்பகாலம் நடத்தினார். வடக்கேயும்
திரு.என்.சி.கேல்கர் என்பவர் மராத்தி மொழியில் தம்பிடி விலையில்
'பிரபாத்' என்ற பெயரில் நாளிதழொன்றை நடத்தினார்.
1919 ஏப்ரல் ஏழாம் நாளன்று நாடு முழுவதும் 'சத்தியாக்கிரகம்' என்ற
பத்திரிக்கை, சட்டப்படி அரசினரிடம் அனுமதி பெறாமலே - சட்டத்திற்கு
விரோதமாக - கையால் எழுதி, 'சைக்லோஸ்டைல்'