பக்கம் எண் :

268விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

வெளியிடப்பட்டது.  இதுவே,  பாரதியார் பெயரில் வெளியான முதல் கவிதை
நூலாகும்.

     1909ல்  ஸ்வதேச  கீதங்களின் இரண்டாம் பாகமாக “ஜன்ம பூமி" என்ற
நூலை  பாரதியார்  வெளியிட்டார்.  அதிலே 16 பாடல்கள் அடங்கியிருந்தன.
1906ல்  வெளியிட்ட 'ஸ்வேதேச கீதங்கள்'  என்ற  முதல்   நூலுக்கு   நல்ல
வரவேற்பு  இருந்ததாலேயே  இரண்டாவது நூலை வெளியிடத் துணிந்ததாகத்
தமது முன்னுரையில் பாரதியார் கூறியுள்ளார்.

     திரு.  ஜி.ஏ. நடேசன்,  அந்நாளில்  காங்கிரசோடும்   அதன்   பெருந்
தலைவர்களோடும்   நெருங்கிய   தொடர்பு   கொண்டிருந்தார்.   காங்கிரஸ்
மகாசபைகளிலே  நிகழ்த்தப்பட்ட  தலைமையுரைகளைத்  தொகுத்து, இரண்டு
தொகுதிகளாக -  ஒவ்வொன்றும்  சுமார் ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக -
வெளியிட்டார். மற்றும், 'தேசிய நூல்கள்' என்ற முத்திரையோடு, காந்தியடிகள்,
சரோஜினி நாயுடு, டாக்டர் அன்னிபெசன்ட், மதன்மோகன் மாளவியா போன்ற
காங்கிரஸ்  தலைவர்களின்  பேச்சுக்களையும்  எழுத்துக்களையும் தொகுத்து,
ஒவ்வொரு தலைவருடைய தொகுப்பையும் தனித்தனி நூலாக - ஒவ்வொன்றும்
சுமார் ஆயிரம் பக்கம் கொண்டதாக - வெளியிட்டுள்ளார்.

     இவையன்றி,   இராஜா   ராம்  மோகனர்,   விவேகானந்தர்   போன்ற
ஞானியர்கள்;    டாக்டர்.பி.ஸி.ரே,   சர்.ஜே.ஸி.போஸ்   போன்ற    இந்திய
விஞ்ஞானிகள்  ஆகியோரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் தொகுத்து
நூல் வடிவில் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்ப் பற்றற்ற தமிழர் கம்பெனி!

     சென்னை ஜி.ஏ. நடேசன் அண்டு கம்பெனியார், சட்டம்  -  இலக்கியம்
ஆகிய  துறைகளிலும்  பல  நூல்களை  ஆங்கிலத்தில்  வெளியிட்டுள்ளனர்.
காளிதாசன்,  பவபூதி  போன்ற  சம்ஸ்கிருத  மகாகவிகளின் இலக்கியங்களை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளனர். வியப்பென்னவென்றால்,
தேசபக்தியுடைய  ஒரு  தமிழரால்  நிறுவப்பட்டு, அவராலேயே நெடுங்காலம்
நடத்தப்பட்ட  இக்கம்பெனியானது,  தமிழ்  நூல்களை   வெளியிடாததாகும்.
இத்துறையில்  அக்கம்பெனி தனது கருத்தைச் செலுத்தியதாகக் கூடத் தகவல்
இல்லை.      காரணம்,      மூலதனம்      இல்லாமையன்று:     தமிழ்