நூல்களை வெளியிட முதலில் தேவைப்படுவது பணமன்று; தமிழ்ப்பற்று! அந்த
மூலதனம் ஆங்கில மோகத்தில் மூழ்கிக் கிடந்த ஜி.ஏ.நடேசன்
கம்பெனியாரிடம் அன்று இருக்கவில்லை. ஜி.ஏ. நடேசன் கம்பெனியார் நினைத்திருந்தால், தாங்கள் ஆங்கிலத்தில்
வெளியிட்ட தேசிய நூல்களில் சிலவற்றை, சுருங்கிய அளவிலேனும் தமிழில்
மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கலாம். அப்படி அவர்கள் செய்யாததற்கு
வேறு காரணங்களும் உண்டு.
விடுதலைக் கிளர்ச்சி சம்பந்தப்பட்ட நூல்களை, ஆங்கிலத்தில்
வெளியிடுவதனை சகித்துக் கொண்ட பிரிட்டிஷ் அரசு, அதே நூல்களைப்
பிரதேச மொழிகளில் வெளியிடுவோரை சந்தேகக் கண் கொண்டு பார்த்தது.
அவர்களுக்கு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பலவிதமான
இன்னல்களைத் தந்தது. இதற்கஞ்சியும் ஜி.ஏ. நடேசன் கம்பெனியார் தமிழ்
நூல்களை வெளியிடுவதில் ஆர்வங்காட்டத் தவறியிருக்கலாம். இதைவிடவும்
முக்கிய காரணம், அந்நாளில் தமிழில் நூல்கள் வெளியிடுவது இலாபகரமாக
இருக்கவில்லை யென்பதாகும்.
ஆங்கிலம் உலகமொழியாதலால், அதில் வெளியாகும் நூற்கள்
பல்லாயிரக்கணக்கில் உலக சந்தையிலே விலைபோக முடிந்தது. அதனால்,
சுதந்திர இயக்கம் பற்றிய நூற்கள் கூட, நாட்டு மொழிகளில் வெளிவர
வாய்ப்பில்லாமல், அன்னிய மொழியான ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்தன.
விடுதலைப் போராட்ட காலத்தில் -குறிப்பாக திலகர் சகாப்தத்தில்,தமிழ்
நூல்களை வெளியிடக்கூடிய பதிப்பகங்கள் சில இருந்தன. அவைகூட,
அரசினரின் அடக்குமுறைக்கு அஞ்சி, விடுதலை இயக்க சம்பந்தமான
நூற்களை வெளியிட முன்வரவில்லை. இலக்கியம், நாவல், சிறுகதை, பள்ளிக்
கூடப் பாடநூல்கள் ஆகியவற்றை மட்டுமே வெளியிட்டு வந்தன.சிறை சென்ற
தேசபக்தர்களின் - அரசியல் கலவாத - இலக்கியப் படைப்புக்களை
வெளியிடக்கூட எந்த நிறுவனமும் துணிவு பெறவில்லை.
அந்நாளில், விடுதலை இயக்கப் பிரச்சாரத்தைப் பொறுத்த
வரையில், மேடைப் பேச்சிலே - அதுவும், சாதாரணப்
பொது மக்கள் மத்தியிலே - தமிழ் முதன்மை பெற்ற தென்றாலும்,
இயக்கம் சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜு களெல்லாம் பெரும்பாலும்
ஆங்கிலத்திலேயே மலிந்துவந்தன அதனால் பிரச்சார இலக்கியங்