பக்கம் எண் :

270விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

களும் ஆங்கில மயமாகவே இருந்தன.அவற்றை மொழி  பெயர்த்து வெளியிடு
வதும் எளிதாக இருக்கவில்லை. மற்றும்,   நாட்டு  மக்களிலே  'படித்தவர்கள்'
என்போர், புத்தகங்களை  வாங்கிப் படிக்கும்  வழக்கமுடையோர், அநேகமாக
ஆங்கிலம் படித்தவர்களாவே  இருந்தனர்.   அவர்கள்   ஆங்கிலத்திலேயே
தாங்கள்  விரும்பும்  விஷயங்களைப்  படித்து   வந்தனராதலால்,  அவற்றின்
தமிழ்மொழி பெயர்ப்பையும்  அவர்கள்  வாங்கிப்   படிக்கும் நிலை  இல்லை.
இதனால்,   இலாபத்தை   மட்டுமே  குறிக்கோளாகக்  கொண்டு   நூல்களை
வெளியிட்ட பதிப்பகங்கள் தமிழில் அரசியல் நூல்களை  வெளியிட  ஆர்வங்
காட்டவில்லை.

     இருள் சூழ்ந்த இந்நிலையில், தேசியவாதிகளில் தமிழ் எழுத்தாளர்களாக
இருந்தோர், ஓரணா அல்லது இரண்டணா விலையில் சிறு சிறு பிரசுரங்களைத்
தாங்களாகவே  தமிழில்  வெளியிட்டனர்.   இந்த   முயற்சியும்   இருபதாம்
நூற்றாண்டின் முதல் பத்தாண்டு காலத்தில்தான் முளைத்தது. இந்த முயற்சியில்
ஈடுபட்டவர்  -   ஈடுபடுமாறு    பிற    தேசபக்தர்களையும்    தூண்டியவர்
சி. சுப்பிரமணிய பாரதியாரே யாவர்.

     1910  நவம்பரில் " மாதா வாசகம் "  என்ற  பெயரில்  பாரதியார் தமது
மூன்றாவது  நூலை  வெளியிட்டார்.  இதில்  11 பாடல்கள்  அடங்கியிருந்தன.
பின்னும்  பல    நூல்களை  வெளியிட்டார்.  தனி   நபர்களின்  உதவியைக்
கொண்டே  பாரதியார்  தம்முடைய   நூல்களை   வெளியிட்டார்   என்பது
நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

     பரலி . சு. நெல்லையப்பர், 1917ல் பாரதியாரின் கவிதைகள்  சிலவற்றைத்
தொகுத்து, " நாட்டுப்பாட்டு " என்ற பெயரில் நூலாக  வெளியிட்டார். 'தேசிய
கீதங்கள்’  என்ற   பெயரில்  வெளியிட்டால்  அரசு  தடைவிதிக்கும்  என்று
அஞ்சியே, "நாட்டுப்பாட்டு" என்ற பெயர் கொடுத்தாராம். ஆம்; தேசிய மணம்
கமழும் நூல்களைத் தமிழில் வெளியிட முடியாத நிலை!

     பாரதியார்,  பண  வசதியற்ற  நிலையில்  சொந்தப்  பொறுப்பில்  நூல்
வெளியிடுவதிலுள்ள இன்னல்களை  யுணர்ந்தும், தம்முடைய நூல்கள் அழகிய
முறையில்  அச்சிடப்பட்டு நாடு முழுவதும் பரவ வேண்டுமென்று  விரும்பியும்
அப்போது சென்னையில் இயங்கி வந்த " தமிழ் வளர்ப்புப் பண்ணை "  என்ற
பதிப்பகத்தின் உதவியை நாடினார்,