யொழுக்கத்தை வளர்க்கும், தற்காலப் பெரிய பெரிய கல்லூரிகளைப்
பார்க்கிலும் 'ஆத்திசூடி', 'கொன்றைவேந்தன்' முதலிய ஒழுக்க நூல்களைப்
போதிக்கும் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் எத்தனையோ மடங்கு சிறந்தன
என்று அஞ்சாது சொல்வேன்."1 தமிழகத்தில் கல்வி அறிவிற் சிறந்த பெண்மணிகள் பலர் காங்கிரஸ்
மகாசபையின் தேசியக் கல்வித் திட்டத்தைப் பரப்புவதிலே முன்னின்று
பணிபுரிந்தனர். அவர்களிலே ஒருவர், அடையாறு பிரம்மஞான சங்கத்தின்
தலைவியாக இருந்த அன்னிபெசன்ட் அம்மையார். மற்றொருவர், பெண்
குலத்தின் விடுதலைக்குப் பாடுபட்ட டாக்டர் எஸ்.முத்துலட்சுமி ரெட்டியார்.
பெசண்ட் அம்மையார் தமது நிர்வாகித்திலிருந்த அடையாறு
பிரம்மஞான சங்கத்தின் சார்பில் தேசியப்பள்ளி ஒன்றைத் தொடங்கி
நடத்தினார். அதே சங்கத்தைச் சார்ந்த டாக்டர் அருண்டேல் என்பார்
தலைமையில் சென்னை மாகாண அளவில் செயல்படத்தக்க 'தேசியக் கல்வி
அபிவிருத்தி சங்கம்' ஒன்றும் தோற்றுவிக்கப்பெற்றது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் அடையாறில் 'ஒளவை
விடுதி' ஒன்று 1930ல் ஆரம்பிக்கப்பெற்று, அதிலே தேசியக் கல்விமுறை
செயல்படுத்தப்பெற்றது.
தேசியக்கவி பாரதியார், ஆங்கிலேயர் இந்த நாட்டில் நடைமுறைக்குக்
கொண்டுவந்த தேசிய விரோதக் கல்விபற்றித் தம் 'சுயசரிதை'க் கவிதையில்
மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டுள்ளார். அடிமைகளைத் தயாரிக்கும்
பள்ளிக்குத் தம்முடைய தந்தையார் தம்மை அனுப்பியதுபற்றிப் பாரதியார்
வருந்தி வருந்தி வருணித்துள்ளார். அதிலே, மெக்காலேயின் கல்வித்
திட்டத்தை, "அல்லல் மிக்கதோர் மண்படு கல்வி", "அற்பர் கல்வி",
"பேடிக்கல்வி", "மாக்கள் பயின்றிடுங் கலை" என்றும்; அத்தகு கல்வி
பயிற்றுவிக்கும் பள்ளியை, "ஏதிலார் தருங்கல்விப் படுகுழி" என்றும்,
வாதும் பொய்ம்மையும் என்றவி லங்கினம் வாழும் வெங்குகை...
என்றும் வருணித்துள்ளார் பாரதியார், அன்னியர் தந்த அடிமைக்
கல்வியால் பயனேதும் விளைந்ததில்லை யென்பதனை,
1. 'தமிழ்ச் சோலை', பக்.169-170.