அந்த உறுதி மொழியை நிறைவேற்றிக் காட்ட சுதந்திரப்
போராட்டத்தின் மத்தியிலேயே அரியதொரு வாய்ப்பைப் பெற்றனர்
தேசியவாதிகள். ஆம்; விடுதலைப் போராட்டத்திற்கு சற்று ஓய்வு கொடுத்து,
1937 முதல் 1939 வரை இரண்டரை ஆண்டுகாலம் இந்திய மாநிலங்கள்
சிலவற்றிலே ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தியது காங்கிரஸ். அந்த
நாளிலே, அரசாங்கப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேசியக்
கல்வித்திட்டத்தை அமுல் நடத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
உடலுழைப்புக்கு முதன்மை தரும் ஆதாரக்கல்விமுறை ஆரம்பப் பள்ளிகளிலே
புகுத்தப் பெற்றது.
நடுத்தர - உயர்தர கல்விக்கான பாடங்களை ஆங்கில மொழி மூலம்
பயிற்றுவித்து வந்ததற்கு மாறாக, பிரதேச மொழிகளின் மூலம்
பயிற்றுவிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது - குறிப்பாக, தமிழகத்து
உயர்நிலைப் பள்ளிகளில் தமிழையே போதனாமொழியாக்கியது ராஜாஜி
தலைமையிலிருந்த காங்கிரஸ் அமைச்சரவை.
இந்திய மாநிலங்கள் சிலவற்றில் ஒரு இடைக்கால நிகழ்ச்சியாக காங்கிரஸ்
அமைச்சரவைகள் செயல்பட்ட காலத்திலே, அரசாங்கத் துறைதோறும்
ஆங்கிலத் 'துரை'மார்களே தலைமையதிகாரிகளாக இருந்தனர். கல்வித்துறை
இயக்குநரும் ஆங்கிலேயராகவே இருந்தார். அன்னார் உயர்நிலைப்
பள்ளிகளில் பாடங்கள் அனைத்தையும் பிரதேச மொழியிலேயே பயிற்றுவிக்கும்
முறையை விரும்பவில்லை; வெறுக்கவும் செய்தனர்.
சென்னை மாநிலக் கல்வி இயக்குநராக இருந்த மிஸ்டர் ஸ்டாத்தம்
என்பவர், உயர்நிலைப் பள்ளிகளிலே, தமிழகத்தில் தமிழையும் தெலுங்குப்
பிரதேசத்தில் தெலுங்கையும் பயிற்சி மொழிகளாகச் செய்வதற்கு காங்கிரஸ்
அமைச்சரவை எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவரது எதிர்ப்புக்கு
மதிப்பளிக்க மறுத்தார், முதலமைச்சர் ராஜாஜி. 19-10-39 ஆம் தேதியிட்டு
ராஜாஜி அந்த ஆங்கிலத் துரைமகனுக்கு எழுதிய கடிதம் வருமாறு:
"தென்னிந்திய மொழிகளில் தக்க பாடப்புத்தகங்கள்
பிரசுரமாகி, விஞ்ஞானத் துறைகளுக்கான அகராதிகள்
வகுக்கப்படுகிற வரையில், பௌதிக - விஞ்ஞான கணிதங்களைக் கற்பிக்க
தாய்மொழியை உபயோகிக்க இயலாது" என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
இது ஒரு இக்கட்டான நிலை. எவ்வளவு அசௌகரி