தொழிலாளர் இலக்கியம் விடுதலைப் போரின் மற்றொரு முனையாகத் தோன்றிய தொழிலாளர்
இயக்கத்திற்கும் தமிழை வளர்த்த பெருமையிலே சிறிதளவு பங்குண்டு.
அந்நாளில், பெரிய பெரிய தொழிற்சாலைகளும் வாணிப நிறுவனங்களும்
பெரும்பாலும் பிரிட்டிஷாராலேயே நடத்தப்பெற்றன. அதனால்,
அவ்வன்னியரின் பொருளாதார ரீதியான சுரண்டலைத் தடுப்பதிலேயும்
ஆர்வமுடைய தேசியவாதிகள் தொழிலாளர் இயக்கத்தைத் தோற்றுவித்தனர்.
1908ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் நடைபெற்ற கோரல் மில்
வேலைநிறுத்தந்தான் இந்தியாவிலேயே முதன் முதலாக நடைபெற்ற அரசியல்
கலப்புடைய வேலை நிறுத்தமாகும். இதனை, கப்பலோட்டிய தமிழர்
வ.உ.சிதம்பரனார் முன்னின்று நடத்தி வைத்தார். அம்மாவீரர், இரண்டு
ஆயுள் கால சிறைதண்டனை பெற்றதற்கு இந்த வேலை நிறுத்தமும் ஒரு
காரணமாகும்.
தனிப்பெருமை
தொழிற் சங்கத்தைத் தோற்றுவிப்பதிலேயும் இந்தியப் பெருநாடு
முழுவதற்கும் முன்னோடியாக விளங்கியது தமிழ்நாடு. 1918 ஏப்ரல் 27ல்
"சென்னைத் தொழிலாளர் சங்கம்" நிறுவப்பெற்றது. இந்தியாவில் முதன்
முதலில் தோன்றிய மிகவும் கட்டுப்பாடான தொழிற்சங்கம் இதுதான் என்று
கூறப்படுகிறது. திரு.வி.கலியாணசுந்தரனார், குத்தி கேசவப் பிள்ளை,
ஜி.செல்வபதி செட்டியார், இராமாஞ்சலு நாயுடு, பி.பி.வாடியா ஆகியோருடைய
முதன் முயற்சியால் சென்னைத் தொழிலாளர் சங்கம் தோன்றியது. நாளடைவில்
வ.உ.சி., ராஜாஜி, டாக்டர் அன்னிபெசன்ட், டாக்டர் பி.வரதராசுலு
நாயுடு, திரு. கஸ்தூரிரங்க ஐயங்கார், வி.சக்கரைச் செட்டியார்
ஆகிய தேசியவாதிகளும் சென்னைத் தொழிலாளர் சங்கத்தின்
பணிகளிலே பங்கு பெற்றனர். இச்சங்கத்தினை முன்மாதிரியாகக்
கொண்டு வேறு பல தொழிற் சங்கங்களும் சென்னை நகரில்
தோன்றின. போலீஸ்காரர்களுக் கெனவும் தனியாக ஒரு சங்கம் அமைந்தது.
விடுதலைப்போரின் மத்தியிலே ஏகாதிபத்தியத்தின காவலர்களாக
விளங்கிய போலீஸ்காரர்களுக்கெனத் தனியாக சங்கம் அமைவதும், அதனை