தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சீர்திருத்த இயக்கத்திலே தமிழ் மாகாண காங்கிரஸ் அமைப்பு முழுஅளவில் ஈடுபடவில்லை. தேசியவாதிகளிலேயும் முற்போக்கு மனம் படைத்த மிகச்சிலரே சீர்திருத்தப்பணியிலே மிகுந்த ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். அவர்களைச் சிறுபான்மையோராக்கி விடும் வகையிலே வைதிக மனம் படைத்த தேசியவாதிகள் தமிழ் மாகாண காங்கிரசிலே ஆதிக்கம் பெற்றிருந்தனர். அதன் விளைவாகவும், தேசியவாதிகளிலே முன்னணியிலிருந்தோரிடை ஏற்பட்ட கோஷ்டிப் பூசல் காரணமாகவும் பெரியார் ஈ.வே.ரா., திரு.எஸ். இராமநாதன் ஆகிய இருவரும் தேசியப் பாசறையிலிருந்து வெளியேறலாயினர். அந்த வெளியேற்றத்தின் விளைவாக, தமிழ் நாட்டிலே 'சுயமரியாதை இயக்கம்' என்னும் பெயரில் புரட்சிகரமான ஒரு சீர்திருத்த இயக்கம் பிறந்தது. இந்த இயக்கத்தைத் தோற்றுவிக்க முன்னின்று முயற்சி எடுத்தவர் பெரியார் ஈ.வே.இராமசாமியாவார். அவர்தான் சுயமரியாதை இயக்கத்தின் தாயும் தந்தையும் எனலாம். தமிழ் நாட்டில், சமூக சீர்திருத்தப் பணிக்கென சுயமரியாதை இயக்கம் பிறந்த காலத்திலே, வேறு பல சீர்திருத்த இயக்கங்களும் நாட்டில் இயங்கி வந்தன. அவற்றுள், இராசாராம் மோகன் ராய் தோற்றுவித்த பிரம்ம சமாஜம், தயானந்த சரசுவதியால் அமைக்கப் பெற்ற ஆரிய சமாஜம், இராம கிருஷ்ண பரமஹம்சரைப் பின்பற்றி, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பெற்ற இராமகிருஷ்ணச் சங்கம் ஆகியவற்றை முக்கியமாகச் சொல்லலாம். சுயமரியாதை முகாமிலே... இந்தியாவில் வடக்கே தோன்றிய சீர்திருத்த இயக்கங்கள் பிரிட் டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவோ, இந்திய விடுதலைப் புரட்சிக்கு எதிராகவோ செயல்படவில்லை. பிரம்ம சமாஜம் மட்டும்- அதுவும் ராஜாராம் மோகன்ராய் காலம்வரை பிரிட்டிஷ் பேரரசின் ஆதரவுடன் சீர்திருத்தப் பணிகளை ஆற்றிவந்தது. அந்த சமாஜம் கூட, விடுதலைப்போருக்கு விரோதமான முறையில் செயல்படு வதைத் தன் கொள்கையாகக் கொண்டிருக்கவில்லை. இராம கிருஷ்ண சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரான சுவாமி விவேகானந்தர், விடுதலைப்போரில் நேரடியாகக் கலக்கவில்லை என்றாலும் அதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் வகையிலேயே சமயசீர்திருத்தக் |