முடிவுரை இதுகாறும் விடுதலைப்போராட்ட காலத்தில் - விடுதலைப்
பாசறையிலிருந்தே தேசியவாதிகளிலே சிலர், பல்வேறு துறைகளிலும் தமிழ்
மொழியின் வளர்ச்சிக்கு ஆற்றி வந்துள்ள பணிகளைச் சுருக்கமாகக்
கூறினேன். இனி, ஒரு தேசியவாதி என்ற முறையில் நானும் என் போன்ற
தேசியவாதிகள் நிறைந்த தமிழரசுக் கழகமும் விடுதலைப் போரின்
இறுதிக்கட்டத்தில் தமிழ்மொழிக்கு விடுதலை தேட மேற்கொண்ட
முயற்சிகளையும் சிறிதளவு எடுத்துக்காட்டிவிட்டு இந்நூலை முடிக்க
விரும்புகின்றேன்.
தமிழரசுக் கழகம் சுதந்திரக் கதிரவன் தோன்றிக் கொண்டிருந்த
நேரத்தில்தான் பிறந்ததென்றாலும், தேசியத்தின் வாரிசாகவே கழகம்
தோன்றியது. ஆதலால், அது தோன்றிய சூழ்நிலையையேனும் கூறி இந்நூலை
முடித்தால்தான் விடுலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாற்றினை
முழுஅளவில் கூறி முடித்ததாக இருக்கும்.
விடுதலைப் பாசறையினரான தேசியவாதிகளிலே சிலர் இதுகாறும் நான்
கூறிவந்தது போலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு தொண்டாற்றினார்கள்
என்றால், தனிப்பட்ட முறையில்தான். அவர்கள் சார்ந்திருந்த தமிழ் நாடு
காங்கிரஸ் ஸ்தாபன ரீதியில் அதிலே அதிகப் படியாகப் பங்கு பெறவில்லை.
காந்தியடிகள் வகுத்த நிர்மாணத்திட்டத்திலே தாய்மொழி வளர்ச்சிக்குப்
பாடுபடுவதும் ஒரு பகுதியாக இருந்ததென்றாலும், ஏனோ - எதனாலோ,
தமிழ்நாடு காங்கிரஸ் திட்டமிட்டு தமிழ்மொழிக்குத் தொண்டாற்ற
முன்வரவில்லை. தனது நடவடிக்கைகளிலே மிகுதியாக தமிழ் மொழியைக்
கையாண்டு வந்ததோடு மனநிறைவு பெற்றுவிட்டது. ஒருகால், பிறமொழிமாநிலங்களிலும் காங்கிரஸ் கமிட்டிகளின் நிலை இதுதானோ
என்னவோ!
இந்தித்திணிப்பு
1938 முதல் பிறமொழி மாநிலங்களில் இல்லாத ஒரு புதிய
துரதிருஷ்டமான சூழ்நிலை தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு
ஏற்பட்டது. அது, அப்போது ராஜாஜி தலைமையில் அமைந்திருத்த
காங்கிரஸ் அமைச்சரவை உயர்நிலைப்பள்ளிகளில் இந்தியைக்
கட்டாயாடமாக்கியதன் விளைவாகும். அதனால் அதுவரை சமூகசீர்திருத்தப்