மாவட்டச் செயலாளனானேன்! 1936ல் நான் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிச் செயலாளனாகப்
போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதுமுதல் தொடர்ந்து
ஒன்பதாண்டுகாலம் நான் அந்தப் பொறுப்பிலிருந்தேன். அந்தப் பொறுப்பு
பெருமைமிக்க ஒரு பதவியாகப் கருதப்பட்டது. அதனால், தமிழ்மொழி
வளர்ச்சிப் பணியிலே தமிழ்நாடு காங்கிரசை ஈடுபடுத்திவிடவேண்டும் என்ற
எனது கொள்கையைச் செயலில் காட்ட எனக்கு வாய்ப்புக் கிட்டியது.
சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, இராஜ்யத்தின் தலைநகரிலே
செயல்படுவதாதலால், தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு அடுத்த
அமைப்பாக விளங்குகிறது. மாகாணக் கமிட்டிக்கு நிகராகச் செயல்படும்
வசதியும் வாய்ப்பும் அதற்குண்டு. சென்னை மாவட்டச் செயலாளர் என்ற
முறையில் தமிழ்மாகாண காங்கிரஸ் கமிட்டியோடும் தமிழ்நாட்டின் பெருந்
தலைவர்களோடும் நெருங்கித் தொடர்புகொண்டு பழகும் பேற்றினையும் நான்
பெற்றேன். அப்போதும் மேடைப் பேச்சாளனாக இருந்தேன். அதனால்,
பொதுமக்களிடையே அறிமுகமும் செல்வாக்கும் பெற எனக்கு வாய்ப்புக்
கிடைத்தது. இவ்வளவு வாய்ப்பையும் வசதிகளையும் கொண்டு, எனக்குச்
செல்வந் தேடிக்கொள்ளவும் செல்வாக்குத் தேடிக்கொள்ளவும் முயலாமல்,
தேசியத்திற்கும் தமிழுக்கும் இடையே வளர்க்கப்பட்டு வந்த பகையை அகற்றி,
உறவை வளர்க்கவே பாடுபட்டேன்.
நழுவியவர்களைத் தழுவினேன்!
நான் சென்னை மாவட்ட காங்கிரஸ் செயலாளனாக இருந்த
காலத்திலே, தமிழ் மொழியிலே புலமையுடையோரை - காங்கிரசி
லிருந்து விலகியோ, ஒதுங்கியோ இருந்தோரை - காங்கிரஸ் பணிகளிலே
ஈடுபடுத்த முயன்றேன்.அப்போது காங்கிரசுக்கு வெளியேயிருந்த
திரு. வி. கலியாணசுந்தரனாரைத திரும்பவும் தேசியப் பாசறைக்குள்
கொண்டு வந்துவிட வேண்டுமென்பது என் விருப்பம். சூழ்நிலை
அதற்கு எதிராக இருந்ததால், அது சாத்தியப்படவில்லை. ஆனால்,
சென்னை மாவட்ட காங்கிரஸ பெயரால் நான நடத்திய காந்தி பிறந்த
நாள் விழா, பாரதியார் நினைவு நாள் விழா, வ.உ.சி. நினைவுநாள்
விழாக்கூட்டங்களுக்கு அவரை அழைத்துப் பேசச் செய்தேன்.