பிரபல நடிகர் ஆரியகான கே.எஸ். அனந்தநாராயண ஐயர், என்னுடைய
அரிய நண்பராவார். அவரும் நானும் ஒரே வட்டத்தில் (தண்டையார்
பேட்டையில்) வாழ்ந்தோம். அன்னார், தமிழிடத்துக் கரை காணாக்
காதலுடையவர். ஓரளவு இலக்கிய நூற்பயிற்சியுமுடையவர். அவர் காங்கிரஸ்
மனப்பான்மையுடையவராக இருந்தும் காங்கிரஸ் கட்சியார் அவரைப்
பயன்படுத்தாதிருந்தனர். அவருக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்ட பின்னர்,
தமிழுக்கும் தேசியத்திற்கும் உறவு ஏற்படுத்தும் எனது திட்டத்தின்
வெற்றிக்காக அவரையும் பயன்படுத்தினேன். முதல் சர்க்கிள் காங்கிரஸ்
கமிட்டி, முதல் வட்ட காங்கிரஸ் கமிட்டி ஆகியவற்றின் தலைவராகவும்
இருந்து பணியாற்ற அவருக்கு வாய்ப்பு தேடிக் கொடுத்தேன். சென்னை
மாவட்ட காங்கிரசிலும் வடசென்னை சார்பில் அங்கத்தினர் பதவிபெறச்
செய்தேன். ஒவ்வொரு காங்கிரஸ் கூட்டத்திலேயும் அனந்த நாராயண ஐயர்
-என் துண்டுதல் பேரில்-பாரதியார், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் தேசியப்
பாடல்களை மிகுந்த உணர்ச்சியோடு பாடுவார்.
பாரதிவாரம் கொண்டாடவும் வ.உ.சி.நினைவு நாள் நடத்தவும் சென்னை
மாவட்ட காங்கிரஸ் பெயரால் நான் முதல் முயற்சி எடுத்த பின்னர், தமிழ்
நாட்டிலுள்ள மற்ற காங்கிரஸ் கமிட்டிகளும் பின்பற்றின. அந்தப் பெருமக்கள்
பெயரால் மன்றங்களும் பூங்காக்களும் சாலைகளும் தமிழகமெங்கணும்
தோன்றின. ஆம்; வடபுலத்தவர்களை மட்டுமே கொண்டாடி வந்த காங்கிரஸ்
வட்டாரத்தைத் தமிழகத் தலைவர்களையும் புலவர்களையும்கூட கொண்டாடும்
படிச் செய்வதில் ஓரளவு வெற்றி பெற்றேன்.
தமிழ்-தேசிய உறவுக்காகவே!
இவ்வளவு மாறுதல்களையும் செய்ய நான் படிப்படியாக முயன்ற
போதெல்லாம் எனக்கு எதிர்ப்புகளும் ஏற்டாமல் இல்லை. பெரும்
புலவர்- பேராற்றல் மிக்க தலைவர் வ.உ.சிக்கு உருவச்சிலை அமைத்த
போதும், திரு.வி.க., டாக்டர் நாயுடு ஆகிய காங்கிரசல்லாத தமிழினத்
தலைவர்களைக் காங்கிரஸ் மேடைக்கு அழைத்துப் பேசச் செய்தபோதும்
ஒரு சில காங்கிரஸ் தலைவர்கள் என் தேசபக்தியைக கூட சந்தேகித்தனர்.
"கதராடையில் மறைந்து வாழும் ஜஸ்டிஸ் கட்சிக்காரன்-
சுயமரியாதைக்காரன்" என்றெல்லாம் தூற்றவும் பட்டேன். ஆனால்
அவ்வளவையும் பொறுமையோடு சகித்துக்கொண்டு, தமிழ்ப்