வர்களாக இருந்த - சில புலவர்களையும், பட்டம் பெற்ற இளைஞர்களையும் ஒன்றுதிரட்டி, அவர்கள் ஒத்துழைப்பால் 'தமிழரசுக் கழகம்', நிறுவினேன். திரு.வி.க.வும், வீரவிளக்கு வ.வே.சு. ஐயரும், வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் காட்டிய வழியிலே நின்று தேசியத்தையும் தமிழையும் ஒன்றுபடுத்தத் தொண்டாற்றத் தொடங்கினேன். அந்த வகையில் லோகமான்ய திலகரும், காந்தியடிகளும் வளர்த்த காங்கிரசின் வாரிசாகவே தமிழரசுக் கழகத்தைத் தோற்றுவித்தேன். 1944ல் சிறையிலிருந்து நான் விடுதலை பெற்ற பின்னர், தமிழ் நாடு காங்கிரசிலே கோஷ்டிப் பூசல் ஏற்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ்காரர்கள், 'ராஜாஜி கோஷ்டி' என்றும் 'காமராசர் கோஷ்டி' என்றும் பிரிந்து சண்டையிட்டனர். அதிலே நான் ராஜாஜி கோஷ்டியைச் சார்ந்திருந்தேன். ஆம்; நாடு விடுதலை பெறும் தேதி தெரிவதற்கு முன்னே! 'கல்கி'யிலே கட்டுரை! நான் ராஜாஜியின் தலைமையை ஆதரித்ததுகூட, புதிய தமிழகம் படைக்கும் பணியின் பொருட்டுத்தான். "ஏன் ஆதரிக்கிறேன்?" என்னுந் தலைப்பில் ராஜாஜியின் தலைமையை நான் ஆதரித்ததற்கான காரணங்களை விளக்கி, 'கல்கி' வார இதழில் ஒரு சிறப்புக் கட்டுரை எழுதியிருந்தேன். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: "தமிழ் நாட்டின் தனிப்பிரச்சனைகள் பல உண்டு. மொழிவாரி மாகாணங்கள் விரைவில் பிரிக்கப்படும் அல்லவா? அப்போது தமிழ்நாட்டின் எல்லை வட வேங்கடம் முதல் தென்குமரி வரை என்று முடிவு செய்யவேண்டும். தமிழர் மீண்டும் புகழுடன் புதுவாழ்வெய்தத் திட்டம் போட வேண்டும். "இத்தகைய பெருங்காரியங்களை ராஜாஜியைப்போல திறம் பட நிறைவேற்ற வல்லார் தற்சமயம் இல்லையென்று துணிந்து கூறுவேன். "சோதனை மிக்க இந்த சந்தர்ப்பத்தில் அகில இந்தியப் புகழ் வாய்ந்த ஒரு தமிழ்நாட்டுத் தலைவரை நிராகரிக்க முயல்வது தவறு. தமிழர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கவோ அல்லது தமிழர்களின் நலன்களைப் பிறரிடம் பலிகொடுக்கவோ எவருக்கும் உரிமை கிடையாது. அதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்." |