அமைச்சரவை தோன்றி, திரு.டி.எஸ். அவினாசிலிங்கம் கல்வி அமைச்சரான பின்னர், திரும்பவும் தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தை அவர் அமுல் நடத்தினார். அந்நாளில், ஆரம்பப் பள்ளியில் மூன்றாம் வகுப்பிலேயே ஆங்கில மொழிக் கல்வி ஆரம்பமாகும் வகையில் பாடத் திட்டம் அமைந்திருந்ததாதலால், திரு டி.எஸ். அவினாசிலிங்கம் செட்டியார், ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கில மொழி கற்பிக்கப்படுவதை அடியோடு ரத்து செய்தார். திருவள்ளுவர் நினைவு நாளைக் கொண்டாடுமாறு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நகர மன்றங்களுக்கெல்லாம் 1949ல் அரசு ஆணை அனுப்பியது. அந்நாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பெற்றது. சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்கள் பள்ளிகளிலே பாடப்படுவதற்கு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் போடப்பட்டிருந்த தடை அகற்றப் பெற்றது. பாரதியாரின் பாடல்கள், அவருடைய வாரிசுகளிடமிருந்து நஷ்ட ஈட்டின் மூலம் பெற்றுப் பொதுவுடைமையாக்கப் பெற்றன. இதற்குக் கலைஞர் தி.க. சண்முகம் மேற்கொண்ட கிளர்ச்சியும் ஒரு காரணமாகும். அடிமையிருள் நாட்டைவிட்டு அகன்று கொண்டிருந்த தருணத்திலே, விடுதலைப் போரில் ஈடுபட்டு விழுப்புண்பட்ட வீரரான ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கமும் அவருடைய நண்பர்கள் சிலரும் கூட, தமிழ் எழுத்தாளர் சங்கம் நிறுவினர். விடுதலைப் பாசறை வீரரான 'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், காந்தியக் கவிஞர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களைப் பெருமைப்படுத்த மிகப்பெரிய விழாவொன்றினைச் சென்னையிலே 1946ல் நடத்தினார். கோகலே மன்றத்தில் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற அந்த விழாவிலே, காந்தியக் கவிஞருக்குப் பண முடிப்பும் வழங்கப் பெற்றது. சென்னை மாநில அரசு, தமிழ் - தெலுங்கு - கன்னடம் - மலையாளம் ஆகிய மொழிகளுக்கு அரசவைப் புலவர்களை நியமனம் செய்தது. தமிழ் மொழிக்கு நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அரசவைப் புலவராக நியமனம் பெற்றார். தமிழ் மொழியில் கலைக்களஞ்சியம் தயாரித்து வெளியிடவும் திரு. டி.எஸ். அவினாசிலிங்கம் முயற்சி எடுத்தார். அதனை வெளியிடும் |