ஹ்யூம் அவர்கள், இந்திய மக்களிடம் அநுதாபமுடையவர் என்று பெயரெடுத்தவர். இந்தியர்கள் விஷயத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காட்டிய ஆதிக்க மனப்பான்மையை வெறுத்து, தாம் வகித்து வந்த சிவில் சர்விஸ் உத்தியோகத்தைத் துறந்தவர் என்றும், ஒரு சமயம் தமக்கு வரவிருந்த லெப்டினெட் கவர்னர் பதவியைக் கூட ஏற்க மறுத்தவரென்றும் சொல்லப்படுகின்றார். ஹ்யூம் - டப்ரின் சதி ஹ்யூம் அவர்கள், முதலில் காங்கிரசை சமூக சிர்திருத்த சபையாகவே வைக்கக் கருதினார். ஆனால்,அப்போது இந்திய வைசிராயாக இருந்த லார்டு டப்ரின் என்பார், ஹ்யூமைத் திசை திருப்பிவிட்டார். ஹ்யூமுடன் அந்தரங்கத்தில் பேசி, காங்கிரசை அரசியல் ஸ்தாபனமாகத் துவக்குமாறு ஆலோசனை கூறி, தாம் இந்தியாவில் இருக்கும்வரை இதனை வெளியிட வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டாராம். ஹ்யூம், நாட்டில் எழுந்த கலாச்சார ஒருமைப்பாட்டியக்கத்தைக் கண்டு அஞ்சி, அது தேச பக்தியுடைய மதவாதிகள் தலைமையில் இயங்கும் வரை ஏதேனும் ஒரு சமயத்தில் திசை திரும்பக்கூடும் என்று கருதி, அதனைத் தவிர்க்க சுதேசி உணர்வற்ற - ஆங்கில மோகமுடைய படித்தவர்கள் தலைமையின் கீழ் மக்களைக் கொண்டுவர முயன்றார். அதற்கு, காங்கிரசை சமூக சேவா சங்கமாகத் துவக்குவதுதான் சரியென்று அவர் கருதினார். வைசிராய் டப்ரின், காங்கிரஸ், சமூக சேவா சங்கமாக இயங்குவதை எதிர்க்கவில்லை. அத்துடன், அரசியல் இயக்கமாகவும் செயல்பட்டால்தான் மதவாதிகளிடமிருந்து மக்களைப் பிரித்தெடுப்பதில் வெற்றி பெற முடியுமென்று அவர் கருதினார். ஹியூமுக்கும் அது சரியெனப்பட்டதால், அவர் வைசிராய் கருத்தை ஏற்றார். வைசிராய் கேட்டுக் கொண்டபடி, அவருக்கும் தமக்கும் அந்தரங்கத்தில் ஏற்பட்ட உடன் பாட்டை காங்கிரஸ் மகாசபையில் வெளியிடாமல் மறைத்து வைத்தார். காங்கிரஸ் மகாசபை ஆரம்பமான பின்னுள்ள இருபதாண்டு காலத்தில் ஜார்ஜ்ஹியூம், சர். வில்லியம் வெட்டர்பெர்ன், ஆல்பிரட் வெப், சர்.ஹென்றி காட்டன், ராம்சே மக்டொனால்டு ஆகிய ஆங்கிலேயர்கள் காங்கிரஸ் மகாசபைத் தலைவர்களாகப் பதவி வகித்தனர். ஒவ்வொரு மகாசபைக் கூட்டத்தின் போதும் தெய்வ |