பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 87

பலராவர், அவர்களிலே சுப்பிரமணிய சிவம் முக்கியமானவர் ஆவார். இவர்,
நாட்டின்    விடுதலைப்   போரில்    இரண்டறக்    கலந்து,  பிரிட்டிஷ
ஏகாதிபத்தியமென்னும்   விஷ  விருட்சத்தை  ஒழிக்க  அரும்பாடுபட்டார்.
நீதிபதி  பின்ஹே  என்னும் ஆங்கிலேயரிடம் சிவா பத்தாண்டு சிறைவாசத்
தண்டனை  பெற்றார்.  சிறையிலும்  சிறைமீண்ட  பின்னரும் பலநூல்களை
எழுதினார். நாடகங்கள் இயற்றினார். “ஞானபாநு” என்னும் பெயரில் மாதப்
பத்திரிகை  நடத்தினார்.  ஆயிரக்கணக்கான  அரசியல் - இலக்கிய -சமய
மேடைகளில் பேசியும் கவிதைகள் புனைந்தும் தம் தாய்மொழியான தமிழை
வளர்க்கும்    பணியில்    பங்கு    கொண்டார்.  சிறைவாசத்தின் போது
தொழுநோய்க்கு இரையானார். நோயின் கொடுமையைத் தாங்க இயலாமல்
1925ல் மரணமெய்தினார்.

     சுப்பிரமணிய சிவனார் வாழ்ந்த காலத்திலே, படித்துப்பட்டம் பெற்ற
மேதைகளில்  பலர்  தம் தாய்மொழியான தமிழிடத்துப் பற்றுதலில்லாமல்,
அதிலே பயிற்சி பெறவும் விருப்பமில்லாமல், தமிழ் நிலத்துக்குச் சுமையாக
வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து,

     வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
     வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ!

     என்று  பாடினார்  பாரதியார். அதே  உணர்ச்சியை இன்னும் சிறிது
காட்டமாகவே வெளிப்படுத்தினார் தியாகி சுப்பிரமணிய சிவனார்.

     “ஒரு  தேசத்திற்கு  உயிர்  அத்தேசத்தின்   பாஷையாகும். ஸ்வய
பாஷையைக்   கைவிடுவார்   மூடத்தனமாகவோ   அல்லது  பைத்தியம்
பிடித்தோ  தற்கொலை  செய்து  கொள்பவர்களாகின்றார்கள். தற்கொலை
செய்து      கொள்ள    யத்தனித்தல்     அரசாங்கச்   சட்டத்தின்படி
குற்றறமாகுமானால், தன்னையும் தன்னுடைய ஜன சமூகத்தையும் சொல்ல
ஆரம்பித்துத் தேச பாஷையை  உதாசீனம் செய்பவன் ஆயிரம்  மடங்கு
அதிகம்  குற்றங்களைப்  புரிபவனாவான்.  நமது   ராஜாங்கச் சட்டங்கள்
இக்கொலைப்      பாதகர்களைக்    குற்றவாளிகளுடைய   கூட்டத்தில்
சேர்க்காவிட்டாலும்,  எல்லா   வுலகங்களுக்கும்  ராஜ  ராஜேஸ்வரியாய்
அரசாட்சி  புரிந்துவரும்  மகாசக்தியின்  சிருஷ்டி  நீதிகளின்   பிரகாரம்
இவர்கள் குற்றவாளிகளே யாவர்”1


1. ’ஞானபாநு’ செப்டம்பர், 1915.