தேசபக்தர்களை அணியணியாகச் சிறைகளிலே அடைத்து அவர்களை
வாட்டி வதைக்கும் அநியாயத்தை திலகர் சகாப்தத்தில் தான் ஆரம்பித்து
வைத்தது ஆங்கிலப் பேரரசு. அதனால், சிறையிலே தம் தாய்மொழி
வளர்ச்சிக்குப் பாடுபடும் அரிய வாய்ப்பினை முதன் முதலாகப் பெற்றவர்கள்
திலகர் சகாப்தத்துத் தேச பக்தர்களே யாவர். அவர்களிலே ஒருவர் சிவா.
சிறையில் சிவா அடைபட்டிருந்த காலத்தில், அவரிடம் கடுமையாக
வேலை வாங்கினர் சிறை அதிகாரிகள். அந்நாளில், சிறைகளிலே-
தேசபக்தர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைகளிலே, இரவு நேரங்களில்
படிக்கவும் எழுதவும் விளக்கு வசதி தரப்படவில்லை. பகலிலே கடுமையான
உழைப்பு, இரவிலே கட்டாய ஓய்வு கிடைத்தாலும் தமிழ்த்தொண்டு புரிய
வசதிகளில்லை. அந்த நிலையிலும் சிவா எப்படியோ தமிழ்த் தொண்டு
புரிந்தார். அவரது நெஞ்சில் வளர்ந்த தமிழ்ப் பற்றுதலை எப்படி
வருணிப்பதென்றே தெரியவில்லை!
மனைவியின் அல்லல்!
சிவா, வேதாந்தி, அதனால், தமது சிறைவாசத்தின் போது ‘சச்சிதானந்த
சிவம்’ என்ற அரிய வேதாந்த நூலை இயற்றினார். அதுவே, அவர் எழுதிய
முதல் நூலாக இருக்கவேண்டும். அந்த நூலை அவர் இயற்றக் காரணமாக
இருந்தது மிகவும் பரிதாபகரமான ஒரு நிகழ்ச்சியாகும். அதனை, அவரே,
அந்த நூலின் முன்னுரையில் கூறுகின்றார்:
“மகான் இயேசு கிறிஸ்துவின் பிரதம சிஷ்யராகிய பீட்டர்
என்பவர், “TheBeautiful” என்ற க்ஷேத்திரத்தின் வாயிலிற்
செல்லுங்காலத்தில், அங்கு உட்கார்ந்திருந்த இரண்டு கால்களும்