வரும் புரட்சிகரமான முயற்சிக்கு முதன் முதலில் வழிவகுத்தவர் சுவாமி விவேகானந்தரேயாவார். அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி, தேசபக்தியும் தெய்வபக்தியும் கலந்த தெய்வீக இலக்கியங்களைத் தமிழில் படைத்தார் சிவம். இதனை, தமிழ் வளர்ச்சிக்கு அவர் செய்த அரிய தொண்டு என்றே கொள்ளவேண்டும். சிவா எத்தகைய சூழ்நிலையில் வேதாந்த இலக்கியங்களைத் தமிழிலே படைத்தார் என்பதனைச் சிறிது ஆராய்ந்து பார்த்தால், அமரராகிவிட்ட அந்த மகானைத்தலையார வணங்கி, வாயார வாழ்த்துவது நம் கடமையாகின்றது. அமரர் சிவனார், தேசபக்தர்களிலே தீவிரவாதி! ஆம்; அகிம்சையில் நம்பிக்கையற்ற - ஆயுதப் புரட்சியில் நம்பிக்கை கொண்ட பலாத்காரவாதி! அதனால், போலீஸ் புலிக்கூட்டம் அவரை விரட்டிவிரட்டி வேட்டையாடியது. முதன் முதலாக, 1908ல் பத்தாண்டு சிறைத்தண்டனை பெற்று சேலம் சிறையில் அடைபட்டகாலை, சிவம் தொழுநோய்க்கு இரையானாரல்லவா! அந்தத் தொழுநோய் தொத்துநோய் என்ற காரணத்தால் சிவா ரயிலில் பயணம் செய்யத் தடைவிதித்தது பிரிட்டிஷ் ஆட்சி. அதனால், தொழுநோயால் தன் அங்கமெல்லாம் புண்பட்டிருந்த நிலையிலும் தியாகி சிவம் கால்நடையாகவே தமிழ்நாடு முழுவதையும் சுற்றினார். வறுமை காரணமாக அடிக்கடி பசியாலும் பட்டினியாலும் பாதிக்கப்பட்டார். பிறருக்குத் தொத்தும் தன்மையுடைய தொழுநோய் பிடித்தவரென்ற காரணத்தால், சில ஊர்களில் தன்னொத்த தேசபக்தர்கள் கூட தன்னை வரவேற்று உபசரிக்கத் தவறிய போது, வரப்பே தலையணையாகவும் வாய்க்காலே பஞ்சுமெத்தையாகவும் கொண்டு, திறந்த வெளியிலே சிவா கண்ணுறங்கிய நாட்களுமுண்டு. அந்நாளில், பணக்காரர்கள் தேசியப் பாசறைக்கு வெளியே இருந்தனர். அவர்களிலே பலர் பிரிட்டிஷ் பேரரசின் பக்தர்களாக இருந்த காரணத்தால், தேசியப் பாசறையின் பகைவர்களாகவும் விளங்கினர். சொற்ப அளவு செல்வம் படைத்த சிலர், தேசபக்தர்களாகவோ, தேசபக்தர்களின் நண்பர்களாகவோ இருந்தனர். அவர்கள்கூட, போலீசாரால் வேட்டையாடப்பட்ட சிவா போன்ற தீவிரவாதிகளுக்கு உதவும் துணிவுடையவர்களாக இல்லை. தியாகி சிவம், சம்ஸ்கிருத மொழியில் ஓரளவு பயிற்சியும் பெருமளவு பற்றுதலும் உடையவர். அதுபோலவே, ஆங்கில |