பக்கம் எண் :

194தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

தந்தக்கட்டில் ஊஞ்சலைத் தந்துள்ளார். ஜமக்காள நெசவிற்கு
இந்நகர் பெயர் பெற்று விளங்குகிறது.

சென்னிமலை

ஈரோட்டிலிருந்து 29 கி.மீ. தொலைவில் சென்னிமலை
உள்ளது. சென்னிமலையின் அடிவாரத்தில் கைலாசநாதர்
கோவிலும், மலை உச்சியில் முருகனது புகழ்மிக்க கோவிலும்
உள்ளன. முருகன் ‘சென்னிமலை ஆண்டவர்’ எனப்படுகிறார்.
அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் சென்னிமலை ஆகும்.
கொங்குச் சோழ பரம்பரையைச் சேர்ந்த சிவாலயன் என்ற மன்னன்
(கி.பி. 10ஆம் நூற்றாண்டு) சென்னிமலையின்மீதுள்ள முருகனை
வழிபட்டார் என்றும், இக்கோவிலுக்குப் பல திருப்பணிகள்
புரிந்தார் என்றும் கூறப்படுகிறது. சென்னிமலைப் பகுதியில்
வீரத்தைக் காட்டி உயிர்நீத்த வீரர்களுக்கு வடிக்கப்பட்ட பல
நடுகற்சின்னங்கள் (Hero stones) உள்ளன.

‘கொடி காத்த திருப்பூர்க் குமரன்’ சென்னிமலையில்
பிறந்தவர் ஆவார். போர்வைகள் உற்பத்திக்கு இவ்வூர் பெயர்
பெற்று விளங்குகிறது.

கொடுமுடி

ஈரோட்டிலிருந்து 34 கி.மீ. தொலைவில் கொடுமுடி உள்ளது.
பெரியார் மாவட்டத்தில் உள்ளது. கொங்கு நாட்டின் சிறந்த
சிவாலயம் இங்கு உள்ளது. இது இந்துக்களின் புனிதத்தலம்
ஆகும். இறைவன் மகுடீஸ்வரர் எனப்படுகிறார். சம்பந்தரின்
தேவாரப்பாடல்கள் கொடுமுடியைச் சிறப்பிக்கின்றன.
நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் திருப்பணி இவ்வாலயத்தில்
உள்ளது. வீரநாராயணப் பெருமாள் என்ற வைணவ ஆலயமும்
உள்ளது.

அவினாசி, பாண்டிக் கொடுமுடி, சென்னிமலை என்ற
இடங்களிலுள்ள ஆலயங்களின் சிறப்பினைப் புக்கணன் என்ற
ஆங்கில அதிகாரி வெளியிட்ட (1800-1807) அறிக்கையில்
காணலாம்.