கோவிலின் கருவறையில் பட்டீஸ்வரர், லிங்க வடிவில்
காட்சி தருகிறார். இக்கோவிலின் இறைவி பச்சை நாயகி அம்மன்
ஆவார். அம்மன் சந்நிதி அருகில் துர்க்கை அம்மன் சந்நிதி
உள்ளது. கனக சபையில் நடராசர் காட்சி தருகிறார்.
கோவிலின் கலைச்சிறப்பு
பட்டீஸ்வர சுவாமி கோவிலின் கலைச் சிறப்புமிக்க பகுதி
கனக சபை ஆகும். இங்கு ஒரே கல்லினாலான தூண்களில்
பல வியத்தகு சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இச்சபையில்
காணப்படும் எட்டுத் தூண்களிலுள்ள புகழ்மிக்க சிற்பங்கள்
பின்வருமாறு :
1. யானையுரி போர்த்த மூர்த்தி
2. அக்கினி வீரபத்திரர்
3. ஊர்த்துவ தாண்டவர்
4. நர்த்தன கணபதி
5. ஆறுமுகப் பெருமான்
6. ஆலங்காட்டுக் காளி
7. அகோர வீரபத்திரர்
8. பிச்சாடனர்.
மேற்கூறிய எட்டுச் சிற்பங்கள் ஒவ்வொன்றும் ஒரு
கலைக்கருவூலம் ஆகும். இச்சிறபங்கள் காண்போர் யாவரையும்
மெய்மறக்கச் செய்கின்றன. இவை பல புராணச் செய்திகளை
சித்திரிக்கின்றன. நாயக்கர் காலச் சிற்பங்களின் உன்னத உளி
வேலைப்பாட்டினால் உருவான இச்சிற்பங்கள் ‘உலோகத்தினால்
வார்க்கப்பட்டனவா’ என்று நாம் வியக்கும் அளவிற்குப்
பளபளப்பினையும் நுண்ணிய வேலைப்பாட்டையும்
கொண்டுள்ளன. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர்
ஆலயத்திலுள்ள ஆயிரக்கால் மண்டபச் சிற்பங்களுடன்
ஒப்பிடும்படியாக இச்சிற்பங்கள் உள்ளன.
|