பக்கம் எண் :

பண்டைத் தமிழரின் வாழ்க்கை 137

     களவு ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு காமத்துப் பால் வகுத்த
திருவள்ளுவர் கணவன் பரத்தையரை விரும்பித் தன் மனைவியை விட்டுப்
பிரிவதும், மனைவியானவள் தன் கணவனுடைய ‘அடங்கா ஒழுக்கத்தை’க்
கண்டு மனம் புழுங்குவதும் ஆகிய அகத்துறைகட்கு இலக்கணம் கண்டிலர்.
திருக்குறளில் பரத்தையர் என்னும் சொல்லை அவர் ஆளுவதில்லை.
பொருட்பாலில் மட்டும் ஆடவரிடம் காணப்பட்ட சில குற்றங்குறைகளை
விலக்குமாறு விதிகள் வகுக்கும்போது ‘வரைவின் மகளிர்’ அதாவது,
‘பொருட்பெண்டிர்’ உறவு இழுக்குத் தரும் என்றும், ‘பொருட்பெண்டிர்
பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந் தழீஇ யற்று’26 என்றும்,
‘பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவின
வர்’27 என்றும் கூறுகின்றார். ஆகவே, பரத்தையர் ஒழுக்கம் சங்க காலத்தில்
வாழ்ந்த ஆடவரிடம் ஒரு கறையாகவே காணப்படுகின்றது. பரத்தையரிடம்
உறவு பூண்டு ஒழுகின தம் கணவனைப் பெண்கள் பொறுமையுடன்
வாழ்க்கையில் எற்றுக்கொண்டு அவனுடன் புலந்தும், பிறகு அவன் செய்த
பிழையை மறந்தும் வாழ்ந்து வந்தனர் என்று அறிகின்றோம்.

     கணவன் தன்னைப் பிரிந்து சென்றால் மனைவிக்கு ஊடல்
ஏற்படுவதுண்டு. ஒருவர் இவர்கள் வழக்கில் தலையிட்டாலொழிய அவ்வூடல்
எளிதில் தீருவதில்லை. தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி,
இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் ஆகியவர்கள்
அனைவருக்குமே இவ்வூடலைத் தீர்த்து வைக்கும் உரிமையுண்டு. கணவன்
மனைவியரிடையே அடிக்கடி ஊடல் ஏற்பட்டால்தான் வாழ்க்கையில் இன்பம்
ஊறும் என்றும், ஆனால் அந்த ஊடலை நீடிக்க விடக்கூடாதென்றும்
திருவள்ளுவர் அறிவுறுத்துகின்றார்.28

     திருமணமான பிறகு கணவன் மேலும் கல்வி கற்பதற்கோ, பொருள்
தேடுவதற்கோ தன் மனைவியைவிட்டுப் பிரிய நேருவதுண்டு.29 கல்விக்காக
ஏற்படும் பிரிவு மூன்றாண்டுகட்கு மேல் நீடிக்கக்கூடாது என்பது மரபு.
மன்னனுடைய போர்ப்பணியை மேற்கொண்டோ, மன்னனுடைய கடமைகள்
வேறு எவற்றையேனும் ஏற்றோ, அன்றிப் பொருள் தேடவோ கணவன் தன்
மனைவியைவிட்டுப் பிரிய நேர்ந்தால், அப் பிரிவு ஓராண்டுக்கு

     26. குறள், 913. 27. குறள், 914.
     28. குறள், 1302
     29. தொல். பொருள். அகத்திணை, 25.