பக்கம் எண் :

பல்லவர்கள் 195

இரண்டாம் புலிகேசியின்மேல் போர்தொடுத்து மாபெரும் வெற்றி பெற்றான்.
இரண்டாம் வாதாபிப் போர் வரலாற்றுப் புகழ்பெற்றதாகும். அப்போரை
நடத்தி வெற்றிவாகை சூடி வந்த படைத் தலைமையர் பரஞ்சோதியே. பிறகு
சிறுத்தொண்டநாயனராகத் திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றார்.
நரசிம்மவர்மன் இரண்டாம் வாதாபிப் போரில் அந் நகரைக் கைப்பற்றிய
பிறகு புலிகேசி நீண்ட நாள் உயிர் வாழவில்லை. அவன் காலமான பிறகு (கி.
பி. 642) சளுக்கர் நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக அந் நாட்டின்
தென்பகுதிகள் பதின்மூன்று ஆண்டுகள் பல்லவரின் ஆட்சியில் இருந்து
வந்தன. அக் கால அளவில் மூன்று அரசர்கள் சளுக்க அரியணைமேல்
அமர்ந்து ஆட்சி புரிந்து வந்தனர் என விக்கிரமாதித்தன் கல்வெட்டுகள்
கூறகின்றன. அம் மூவரும் பல்லவனுக்கு அடிபணிந்திருந்தனர் போலும்.
இரண்டாம் புலிகேசியினிடம் ஹர்ஷவர்த்தனன் தோல்வியுற்றுத் தன்
வீரத்துக்குக் களங்கம் கற்பித்துக் கொண்டான். அதே புலிகேசியை வென்று
வாகை சூடி முதலாம் நரசிம்மவர்மன் தன் தந்தைக்கு ஏற்பட்ட இழுக்குக்குக்
கழுவாய் கண்டான்; ‘வாதாபிகொண்டான்’ என்னும் ஒரு விருதையும்
பெருமையுடன் புனைந்து கொண்டான்.

     முதலாம் நரசிம்மவர்மனிடம் மாபெரும் கடற்படை ஒன்று இருந்தது.
அதன் துணையைக்கொண்டு இருமுறை இலங்கையின்மேல் படை செலுத்திச்
சென்று வெற்றி கண்டான். அவன் தன் நண்பன் மானவர்மன் என்ற சிங்கள
மன்னனுக்கு இலங்கையின் அரசுரிமையை வழங்கினான். (கி. பி. 631)

     இந் நரசிம்மவர்மன் சிவனிடத்தில் பெரிதும் ஈடுபாடுடையவன்.
மாமல்லபுரத்துச் சிற்பங்களைப் படைத்துத் தமிழகத்து வரலாற்றில் அழியாத
புகழிடத்தைப் பெற்றுக்கொண்டான் இம்மன்னன். இவன் காலத்தில் சீன
யாத்திரிகன் யுவான்-சுவாங் காஞ்சிபுரத்துக்கு வந்திருந்தான் (கி. பி. 640).
அவனுடைய குறிப்புகளிலிருந்து அவன் கண்ட தொண்டை மண்டலத்தைப்
பற்றிய செய்திகள் பல கிடைக்கின்றன. காஞ்சிபுரம் ஆறு மைல் சுற்றளவு
இருந்தது. அக் காலத்துத் தமிழகத்து நகரங்களுள் இது மாபெரும் நகரமாகக்
காட்சி அளித்தது. அந் நகரில் நூறு பௌத்தப் பள்ளிகள் நடைபெற்று
வந்தன. அங்குப் பதினாயிரம் பிக்குகள் தங்கி அறம் வளர்க்க வசதிகள்
அமைக்கப்பட்டிருந்தன. இப்பள்ளிகளில் பெரும்பாலன திகம்பரப் பிரிவைச்
சார்ந்தவை. தமிழகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பௌத்தத்துக்குச்
செல்வாக்குக் குன்றி வந்துவிட்டதெனினும் காஞ்சிபுரத்தில் அது