பக்கம் எண் :

பல்லவர்கள் 197

     முதலாம் பரமேசுவரவர்மனுக்குப் பிறகு அவன் மகன் இரண்டாம்
நரசிம்மவர்மன் இராசசிம்மன் (ச. கி. பி. 695-722) மணிமுடி சூட்டிக்
கொண்டான். இவனுடைய கல்வெட்டுகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலேயே
பொறிக்கப்பட்டுள்ளன. இவன் ஏறக்குறைய இருநூற்றைம்பது விருதுகளைத்
தன் பெயருடன் இணைத்துக் கொண்டான். அவற்றுள் சிறப்பானவை
இராசசிம்மன், சங்கரபத்தன், ஆகமப்பிரியன் என்பனவாம். பிராமணரின்
கடிகைகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்து வந்தான். மேலும், பல
சிறப்புகளை இவனுடைய ஆட்சியில் காண்கின்றோம். சீன தேசத்துக்குத் தூது
ஒன்றை அனுப்பிப் படைத்துணை பெற்றுத் திபேத்தின்மேல் போர்
தொடுத்தான். இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனின் ஆட்சி சில தீவுகளிலும்
செலுத்தப்பட்டு வந்தது. அஃதுடன் கிழக்கிந்தியத் தீவு இராச்சியங்களுடன்
இவன் நட்புறவு வைத்திருந்தான்.

     இவ் விரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சிபுரத்தில்
வாழ்ந்திருந்த தண்டி என்ற வடமொழிப் புலவர் தமிழில் அணியிலக்கணம்
ஒன்றை இயற்றியுள்ளார். அது அவர் பெயராலேயே ‘தண்டியலங்காரம்’ என்று
வழங்கி வருகின்றது. இப் பல்லவ மன்னன் பனைமலை, மாமல்லபுரம் ஆகிய
இடங்களிலும் கற்றளிகள் எழுப்பியுள்ளான். மாமல்லபுரம் நகரமே இவன்
காலத்தில் அமைக்கப்பட்டதுதான். அங்கு ஒரே பாறையில் குடையப்பட்டுள்ள
கோயில்களும் சிற்பங்களும் கடற்கரைக் கோயிலும் இவன் காலத்தில்
செதுக்கப்பட்டவையேயாம். இம்மன்னனுக்குப் பெரும் புகழையும்,
சைவசமயத்தில் என்றும் அழியாத இடத்தையும் பெற்றுக்கொடுத்தது
காஞ்சிபுரத்தில் இவன் எழுப்பிய கைலாசநாதர் கோயிலாகும். திருத்தொண்டத்
தொகையில் நாயன்மார்களுள் ஒருவராகச் சேர்க்கப்பட்டிருக்கும் பூசலார்
நாயனார் திருநின்றவூரில் சிவபெருமானுக்குத் தம் நெஞ்சிலேயே கோயில்
ஒன்றை எழுப்பிய காலத்தில் காஞ்சிபுரத்தில் கற்றளி ஒன்றை இம் மன்னன்
கட்டி, அதில் சிவபெருமானை எழுந்தருளிவித்தான் எனப் பெரியபுராணம்
கூறும். திருத்தொண்டத் தொகையில் கழற்சிங்க நாயனாராகச்
சேர்க்கப்பட்டுள்ள மன்னன் இந் நரசிம்மவர்ம பல்லவன்தான். இவனுக்கு
அழகிற் சிறந்த மனைவியர் இருவர் இருந்தனர். ஒருத்தி நடனத்தில் மிகவும்
வல்லவள். அவள் பெயர் அரங்கப் பதாகை.

     இரண்டாம் நரசிம்மவர்மனுக்குப் பிறகு அவன் மகன் இரண்டாம்
பரமேசுவரவர்மன் (கி.பி.722-730) பட்டமேற்றான். இவன்