பக்கம் எண் :

198தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

நீண்ட நாள் அரசாட்சியில் நீடித்திருக்கவில்லை. இவனுடைய ஆட்சியின்
இறுதியாண்டுகளில் சளுக்கர்கள் பல்லவரின்மேல் மீண்டும் படையெடுத்தனர்.
விளந்தை என்ற ஊரில் நடைபெற்ற போரில் இவனைச் சங்க மன்னன்
ஸ்ரீபுருஷன் என்பான் கொன்றான். பரமேசுவரன் இறந்த பிறகு நாட்டில்
அரசுரிமைக் குழப்பம் ஒன்று ஏற்பட்டது. அரசுரிமையை ஏற்று அரியணை ஏற
யாருமே முன்வரவில்லை. அவ்வமயம் பல்லவரின் இளைய பரம்பரையைச்
சேர்ந்த இரணியவர்மனிடம் மக்கள் முறையிட்டுக் கொண்டனர்.
அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கி அவன் பன்னிரண்டு வயதே
நிரம்பிய தன் மகன் பரமேசுவரனுக்கு முடி சூட்டுவிக்க ஒப்புக்கொண்டான்.
இச் சிறுவன் இரண்டாம் நந்திவர்ம பல்லவன் என்ற பெயரில் அரசுகட்டில்
ஏறினான் (கி. பி. 730-795). வைகுண்டப் பெருமாள் கோயில் கல்வெட்டு
ஒன்று இச் செய்தியைத் தெரிவிக்கின்றது.

     பல்லவ சளுக்க பாண்டியரின் கல்வெட்டுகளிலிருந்து நந்திவர்மனின்
ஆட்சியைப் பற்றிப் பல அரிய செய்திகளை அறிந்து கொள்ளுகின்றோம்.
அரிய வாய்ப்பு ஒன்று பழுத்துத் தன் மடியில் விழக்கண்ட சளுக்க மன்னன்
இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சிபுரத்தின்மேல் படையெடுத்து வந்து
(கி. பி. 740) அதை எளிதில் கைப்பற்றிக்கொண்டான். நந்திவர்மன்
காஞ்சியைக் கைவிட்டுத் தோற்றோடிவிட்டான். விக்கிரமாதித்தன் நகரத்தையும்
கோயில்களையும் அழிக்கவில்லை. கோயில்களின் சிற்ப அழகுகளில் சொக்கி
அவற்றுக்குப் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினான். முந்திய
தாக்குதலில் அவற்றினிடமிருந்து சளுக்கர்கள் கைப்பற்றிச் சென்றிருந்த
விலையுயர்ந்த அணிகலன்களை அவற்றுக்கே திருப்பி அளித்துவிட்டான்.
அஃதுடன் அமையாமல் தமிழகத்துக் கைதேர்ந்த சிற்பிகளைத் தன்
நாட்டுக்குக் கூட்டிச் சென்று பட்டடக்கல் முதலிய இடங்களில் தமிழகத்துச்
சிற்ப அழகுகள் ததும்பும் வகையில் பல கோயில்களையும் எழுப்பினான்.

     இரண்டாம் நந்திவர்மன் ஓய்ந்திருக்கவில்லை. உதயசந்திரன் என்ற
திறன்மிக்க படைத்தலைவன் ஒருவன் துணைகொண்டு காஞ்சிபுரத்தையும்
பல்லவ அரசையும் மீட்டுக்கொண்டான். ரேவா என்ற இராஷ்டிரகூடப்
பெண்ணை அவன் மணந்து அவள் மூலம் தந்திவர்ம பல்லவனைப்
பெற்றெடுத்தான்.

     இரண்டாம் நந்திவர்மன் வைணவ சமயத்தைப் பின்பற்றியவன்.
காஞ்சியில் முக்தேசுவரர் கோயிலையும், வைகுண்டப்