உண்டு. சில ஊர்களின் பெயர்களில் அவ் விருது சேர்ந்திருப்பதை இன்றும் காணலாம். ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கார்வேட்டி நகரம் காடுவெட்டி நகரம் என்பதன் மரூஉவேயாகுமெனத் தோன்றுகின்றது. சென்னைக்குப் பன்னிரண்டு கல் தொலைவில் ‘காடுவெட்டி’ என்ற பெயருள்ள சிற்றூர் ஒன்றும் உண்டு. மலை வண்ண ஓவியம் பண்டைத் தமிழர்கள் ஓவியக் கலையில் தேர்ச்சி யடைந்திருந்தன ரென்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. ஆனால் அக்கால ஓவியங்கள் யாவும் கற்சுவர் அல்லது கற்பாறை மீது தீட்டப்பட்டிருந்த தென்றும் கூறமுடியாது; சுவர் மேலும் தூண்மீதும் சில அமைந்திருக்கலாம். கற்பாறை மீது தீட்டப்பட்ட ஓவியங்கள் சில பல்லவர், பாண்டியர் கோயில்களில் காணப்படுகின்றன. இவை யாவற்றிற்கும் வழிகாட்டியா யிருந்தவன் விசித்திரசித்தன் என்ற புகழ் பெற்ற முதலாம் மகேந்திரவர்மப் பல்லவனே எனக் கருதலாம். மாமண்டூர்க் குகைக்கோயிலிலுள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட ‘தக்ஷணசித்திர’ என்னும் ஓவிய நூலைப் படைத்தவன் மகேந்திரனே ஆவான் எனக் கருதலாம். அவனுக்குச் ‘சித்திரகாரப் புலி’ என்ற விருதும் உண்டு. சித்தன்னவாசல், மலையடிப்பட்டி (புதுக்கோட்டை மாவட்டம்), மாமல்லபுரம் ஆதிவராகக் குகைக்கோயில், மாமண்டூர்க் குகைக்கோயில் ஆகியவற்றிலும், வடஆர்க்காட்டு மாவட்டத்தைச் சார்ந்த அர்மாமலைக் குகைக்கோயிலிலும் கற்பாறைமீது தீட்டப்பட்ட பழைய ஓவியங்களைக் காணலாம். மாமல்லபுரத்துச் சிற்பங்கள் யாவும், வராகக்குகையின் சில பகுதிகளிலும் மாமண்டூர்க் குகையில் காணுவதுபோல் ஓவியமாகவே தீட்டியிருக்கலாம். ஆனால் நடுவில் காணும் ஆதிவராகச் சிலையிலுள்ள சாயப்பூச்சு இக்காலத்தைச் சார்ந்ததென்று மிகப் பலரும் கருதுகின்றனர். மாமல்லபுரத்து மிகச் சிறப்பு வாய்ந்த சிலர் பகீரதன் தவம் (அர்ச்சுனன் தவம்) எனப்படுவதும் வேறு சில புடைப்புச் சிற்பங்களும் ஓவியப் படைப்பாக ஆதியிலேயே அமைக்கப் பெற்றதெனச் சிலர் கருதினர். ஆனால், தற்போதைய ஆராய்ச்சியாளருள் பெரும்பாலாரும் அதை ஒப்புக் கொள்ளவில்லை. ஆதியிலேயே இன்றிருப்பது போல்தான் தோன்றியிருக்க வேண்டும் என்பது அவர்கள் கருத்து. |