பக்கம் எண் :

பல்லவர்கள் 205

     பல்லவர் காலத்து ஓவியங்கள் சில சித்தன்னவாசலில் காணப்படுகின்றன.
இங்குள்ள குகை முழுவதும் ஆதியில் சாய மடிக்கப் பட்டிருந்ததாகத்
தோன்றுகிறது. ஆனால் தற்போது குகையின் உபரிப்பகுதியிலும்,
மேல்தளத்திலும், தூண்களிலும் தாம் ஓவியப்படைப்பின் அடையாளங்கள்
காணப்படுகின்றன. எஞ்சியுள்ளவற்றில் மிக்க கவர்ச்சியளிக்கும் ஓவியம்
அங்குச் சித்திரிக்கப்பட்டிருக்கும் ஒரு குளமே. அதில் தாரை மலர், மீன்கள்,
எருமைகள், யானைகள் முதலியவையும், மூன்று மனித உருக்களும்
சித்திரிக்கப்பட்டுள்ளன. அம் மூன்று மனிதர்களையும் சமணர்களெனக்
கருதலாம். தூண்களில் பெண்கள் சிலர் நடனமாடுவதைக்
காட்டியிருக்கிறார்கள்.

     சித்தன்னவாசல் குகை ஆதியில் சமணதீர்த்தங்கரர்களுக்கு அர்ப்பணம்
செய்யப்பட்டிருந்தது. அங்குக் காணும் ஓவியப் படைப்புகள் முதலாம்
மகேந்திரவர்மன் காலத்தைச் சார்ந்தவை எனப் பலரும் முன்னாளில் கருதினர்.
ஆனால், தற்போதைய ஆராய்ச்சியாளர் மிகப்பலரும் அவை ஒன்பதாவது
நூற்றாண்டைச் சார்ந்த பாண்டியர் காலத்தவை என எண்ணுகின்றனர்.

     வடஆர்க்காட்டு அர்மாமலையில் ஒரு குன்றின்மேல் தோன்றும்
குகையில் முன்பு சிவன்கோயில் ஒன்று இருந்தது. அங்கே பாறைமீது
செடிகொடி, தாமரை ஆகியவற்றின் ஓவியச் சின்னங்கள் காணப்படுகின்றன.

சோழர்கள்

     நான்காம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டுவரையில் உறையூர்ச்
சோழரைப்பற்றிய செய்திகள் ஒன்றேனும் கிடைக்கவில்லை. களப்பிரர் சோழ
நாட்டைக் கைப்பற்றி ஆண்டுவந்தமைதான் இதற்குக் காரணம். களப்பிர குல
மன்னன் அச்சுதவிக்கிராந்தன் என்பவன் காவிரிப்பூம்பட்டினத்தினின்றும்
அரசாண்டு வந்தான் என்று பௌத்த நூலாசிரியரான புத்ததத்தர் என்பவர்
கூறுகின்றார். சோழன் கரிகாலனுக்குப் பின்பு வந்த சோழர்கள் களப்பிரர்
ஆட்சியின்கீழ் ஒளிமங்கி இருப்பிடம் தெரியாமல் உறையூரில் ஒடுங்கிக்கிடந்து
வாழ்ந்தனர்.

     பல்லவரும் பாண்டியரும் களப்பிரரை முறியடித்துத் தத்தம் நாடுகளை
மீண்டுக்கொண்டனராயினும் சோழர் மட்டும் தலை தூக்காமலேயே சில
நூற்றாண்டுகள் கழித்துவிட்டனர். பிறகு காலப்போக்கில் திருமணத்
தொடர்புகளைக் கொண்டு அவர்கள்