‘பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங் கடல் கொள்ள, வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை யாண்ட’தாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.5 அதாவது இப் பாண்டியனின் நாடு குமரிமுனைக்குத் தெற்கே நெடுந்தொலைவு பரவியிருந்ததாம். அந் நாட்டில் பஃறுளியாற்றையும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோட்டையும் கடல்கொண்டு போயிற்று. இக் காரணத்தால் தன் நாட்டின் பரப்பானது சுருங்கி விட்டதைக் கண்டான் பாண்டிய மன்னன். தென்பால் கடல் மண்டிவிட்டதால் அவன் வடபால் தன் நோக்கத்தைச் செலுத்தினான். வடக்கில் படை செலுத்திச் சென்று இழப்புக்குள்ளான பஃறுளியாற்றுக்கு ஈடாகக் கங்கையையும், குமரிக்கோட்டுக்கு ஈடாக இமயத்தையும் கைக் கொண்டான். இச் செய்தியைப் பற்றிய குறிப்பு ஒன்று முல்லைக் கலியிலும் காணப்படுகின்றது. ‘மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின், மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடு இடம் படப் புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்’ என்று ஆசிரியர் சோழன் நல்லுருத்திரனார் கூறுகின்றார்.6 நக்கீரர், அடியார்க்கு நல்லார் ஆகிய உரையாசிரியர் காலத்திலும், நல்லுருத்திரனார் காலத்திலும் தொல்காப்பியனாருக்கு முன்பு ஒன்றும் பின்பு ஒன்றுமாக இரண்டு கடல்கோள் நிகழ்ந்த செய்தியும், அவற்றால் தமிழகத்துக்குப் பேரிழப்பு நேரிட்ட செய்தியும் பரவலாக வழங்கி வந்திருக்கவேண்டும். கடல்கோள்களுக்குட்பட்டு மூழ்கிப்போன நிலப்பகுதிக்கு ‘லெமூரியாக் கண்டம்’ என்று பெயரளிக்கப்பட்டது. சர் வால்டர் ராலே, பேராசிரியர் ஹெக்கல், சர் ஜான் ஈவான்ஸ், ஸ்காட் எலியட், சர் ஜே. டபிள்யூ. ஹோல்டர்னஸ் ஆகிய ஆய்வாளர்கள் இந் நிலப்பகுதி ஒன்று பண்டைய காலத்தில் இருந்ததென்று ஒப்புக்கொண்டுள்ளனர். அஃதுடன், இங்குதான் மக்களினமே முதன்முதல் உலகின்மேல் தோன்றிற்று என்றும் கூறி ‘லெமூரியக் கொள்கை’யை உருவாக்கினர். கன்னியாகுமரிக்குத் தெற்கிலும் கிழக்கிலும் பெரிய நிலப் பகுதி ஒன்று பரந்து கிடந்தது என்பதற்கும், பிற்பாடு அது பகுதி பகுதியாகப் பல கடல்கோள்களினால் மூழ்கிப்போயிற்று என்பதற்கும் அகச் சான்றுகளும் புறச் சான்றுகளும் உள்ளன. ஆனால், 5. சிலப் : 11 : 19-23. 6. முல்லைக்கலி : 4 : 1-4 |