தமிழகத்தைப் பற்றிய வரையில் பல்லவரின் ஆட்சிக்குட்பட்ட நிலப் பகுதியானது கோட்டம், நாடு, ஊர் என்று மூன்று பிரிவுகட்கு உட்பட்டிருந்தது. நாட்டின் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தவர்கள் நாட்டார் என்றும், ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பானவர்கள் ஊரார் என்றும் பெயர்பெற்றனர். மன்னவரின் ஆணையின்மேல் நிலங்களை ஒருவருக்கு உரிமையாக்குவதும், ஒரிவரிடமிருந்து நில உரிமைகளை பறிப்பதும் நாட்டாரின் கடமைகளில் சிலவாம். மன்னன் பிறப்பித்த ஆணைக்குத் ‘திருமுகம்’ என்றும் ‘கோனோலை’ என்றும் பெயர். ஒருவருக்கு மாற்றித் தரவேண்டிய நிலங்களின் பரப்பை வரையறை செய்து கொடுக்கும் கட்டளைக்கு ‘வரையோலை’ என்று பெயர் வழங்கிற்று. ஊரார் என்னும் சொல் சிற்றூர் ஒன்றின் மக்கள் அவையைக் குறிப்பிட்டு நின்றது. பண்டைத் தமிழரின் ஊர்மன்றத்தைப்போலவே இஃதும் குடிமக்களின் ஆட்சிச் சபையாக விளங்கிற்று. இவ்வூராரின் உரிமைகள், பொறுப்புகள், ஆட்சி வரம்புகள் யாவை என்பன விளங்கவில்லை. எந்தவிதமான விதிகளுக்கும், ஒழுங்கு முறைகளுக்கும் உட்படாமல் ஊர்க் குடிமக்கள் ஒன்று கூடித் தம் தம் ஊரின் நலத்தைப் பற்றிய ஆய்வுகள் செய்து ஒரு முடிவுக்கு வருவது ஊராரின் கடமையெனத் தெரிகின்றது. பிராமணருக்குத் தானமாக அளிக்கப்பட்ட ஊர்கட்குப் ‘பிரமதேயங்கள்’ என்று பெயர். பிரமதேயம் என்ற கிராமத்தை நிருவகிக்கும் பொறுப்பு அக் கிராமத்தைத் தானமாகப் பெற்ற பிராமணரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. அக் கிராமத்துக்குள் ‘நாடு காப்பானும் வியவனும் (அரசாங்க அதிகாரி) நுழையக் கூடாது... அவர்கள் செய்யவேண்டிய பணியைத் தானம் பெற்றவர்களும் அவர்களுடைய சந்ததியாருமே கவனித்து நிறைவேற்ற வேண்டும்’ என்பது தானத்தின் நிபந்தனையாகும். மன்னன் பிராமணருக்குப் பிரமதேயம் அளித்த திருமுகத்தை நாட்டார்கள் தம் தலையின்மேல் வைத்து அறையோலை (அறிக்கையோலை) எழுதி வெளியிடுவார்கள். பிரமதேயம் அல்லது பிராமணரின் கிராம ஆட்சி ஊர்ச் சபையினர் அல்லது மகாசபையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இச் சபையினரைப் ‘பெருமக்கள்’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பல்லவராட்சியில் தமிழகத்தில் ஏறக்குறைய இருபது வகையான சபைகள் இயங்கிவந்தன. ஒவ்வொரு சபையும் பல பணிகளை நிருவகித்து வந்தது. கோயில் நிவந்தங்கள், நீர்ப்பாசனங்கள், உழவு நிலங்கள், நீதி விசாரணை ஆகியவற்றுக்குச் |