அறிகின்றோம். காந்தளூர்ச் சாலையும் பார்த்திவசேகரபுரத்துச் சாலையும் அரசாங்கத்தின் பொருளுதவியின்றியே நடைபெற்று வந்திருக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏறக்குறைய இக் காலத்தைச் சேர்ந்ததாகக் காணப்படும் கல்வெட்டு ஒன்றிலும், ‘கலமறுத்த’ என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது.11 அக் கல்வெட்டு இராசகேசரி என்பவனுடைய பதினான்காம் ஆட்சியாண்டில் நாட்டப்பட்டது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நாள் இரவு திருச்சேனூர் மகாதேவர் முன்பு ‘ஜைமினிகள் சாமவேதத்து மேற்பாதத்து ஒரு துருவும், கீழ்ப்பாதத்து ஒரு துருவும், கரைப்பறிச்சு பட்டம் கடத்துப் பிழையாமே சொன்னார்’க்குப் பரிசு அளிக்க ஒருவன் இருபது காசு பொன் அளித்த செய்தியை அக் கல்வெட்டுக் கூறுகின்றது. அந்த இருபது காசு முதலுக்கு ஆண்டுதோறும் கிடைத்த பலிசை மூன்று காசையும் ‘ஒருகால் கொண்டார் அல்லாதாரை மெய்க்காட்டுத் தீட்டினார் எல்லாரும் தம்மில் அஞ்சு புரியினும் சொல்லிக் கலமறுத்து நல்லாராயினார் ஒருவருக்கு எம்பெருமானே அருள வேண்டும்’ என்பது ஏற்பாடு. முன் ஆண்டுகளில் பரிசு பெற்றவர் பின் ஆண்டுகளில் போட்டியிட முடியாது என்று இதனால் அறிகின்றோம். போட்டியில் வெற்றி பெற்றவர் ‘கலமறுத்து நல்லார் ஆனார் ஒருவர்’ என்று கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றார். இவ்விடத்தில் ‘கலமறுத்து’ என்னும் சொற்களுக்குச் ‘சாசனத்தால் அல்லது ஓயாமல் வரையறுக்கப்பட்ட’ என்னும் பொருள் பொருத்தமாகக் காணப்படுகின்றது. முதலாம் இராசராசன் ஆட்சியின் தொடக்கத்திலே அவனுக்கும், காந்தளூர்ச் சாலை அறங்காவலுக்குமிடையே கருத்து மாறுபாடுகள் தோன்றியிருக்கவேண்டும். அச் சாலை நடைமுறையில், தான் தலையிட்டுச் சில திருத்தங்களைச் செய்ய அம் மன்னன் முனைந்திருக்கலாம். அரசு கட்டுதிட்டங்கட்கு உட்படாமல் இயங்கி வந்த காந்தளூர்ச் சாலை அவனுடைய தலையீட்டை வெறுத்து அவனுக்கு எதிர்ப்புக் காட்டியிருக்கக் கூடும். அப்பேரரசன் தன் படை வலியைப் பயன்படுத்தி அச் சாலையைத் தன் வழிக்குத் திருப்பிக் கொண்டுவந்தனன் என அறிகின்றோம். கருநந்தடக்கன் செப்பேடுகளில் சாலை நிறுவிய ஆண்டு கி.பி. 868 என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் பொறிக்கப் 11. S. I. I. XIII. No. 250. |